Wednesday, November 13, 2013

நானும் சுப்புவும்

நானும் சுப்புவும்


10 வருடம் 12 நாட்களுக்குப் பிறகு சுப்பு இன்று தான் முதல் முறையாக பார்க்கக் கிடைத்தான். கடைசியாக அவனுடைய பாட்டி இறந்தபின் மாமாவுடன் உண்டான சொத்துத் தகராறில் ஊரை விட்டு போனது அவனது குடும்பம்.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் என்னை கடந்து சென்றான்.

"டேய் சுப்பு... " என்று கூப்பிட நினைத்த எனக்குள் ஒரு தயக்கம். அவன் பழைய சுப்புவாக இருந்திருக்க வில்லை.

இரண்டு கைகளையும் வேகமாக வீசி நடப்பவன் இன்று ஒற்றை காலை இழுத்து இழுத்து நடந்து போய்க்கொண்டிருந்தான். வளர விட்டிருந்த தாடியை மழிக்காமல் விட்டிருந்தான். பின்பக்க தலையில் வழுக்கை விழுந்திருந்தது. வேகமாக நடை கூட்டிக்கொண்டு அவன் பின்னாலேயே சென்று அவனருகில் சென்றதும் எனது செல் ஃபோனை காதில் வைத்தவாறு "டேய் சுப்பு எப்டிடா இருக்க..." என்று ஃபோனில் பேசுவது போல பேசினேன்.

திடுமென நான் கூப்பிட எத்தனித்த சுப்புவே திரும்பிப் பார்த்தான். எந்த வியப்புமோ, ஆர்பரிப்புமோ இல்லாமல் நேற்று பார்த்தவனைப் போல "என்னடா சிவா. எப்டி இருக்க...?" என்று ஒரு பக்கமாக சிரித்துக் கொண்டு கேட்டான். "என்னாச்சிடா... எங்க இருக்கீங்க இப்போ... ஏன் இப்டி ஆளே மாறிப் போயிட்ட...?" என்றதும் "பாட்டி தெவசத்துக்கு வந்தேன்... இப்ப தான் வந்து 10, 12 நாள் இருக்கும்." நாடோடி வாழ்கையா போச்சுடா என்னோட வாழ்க்கை... என்று அவன் ஆரம்பித்ததும் அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவை அவனே நிறுத்தினான். ஏறுடா போகலாம் என்றான். ஏறிக்கொண்டோம் இருவரும்.

பிறகு ஆட்டோ டிரைவரிடம் " கொள்ளிடம் பாலத்துக்கு போங்கண்ணே" என்று அவனே போகுமிடம் சொன்னான்.

ஆட்டோவின் வலது புறம் சுப்புவும், இடது புறம் நானுமாக உட்கார்ந்திருந்தோம். வலது புறம் வெளியே பார்த்துக்கொண்டு சிகெரட் தீர தீர ஊதிக்கொண்டே வந்தவன் எதுவும் என்னிடம் பேசவில்லை. அப்போதைக்கு நான் பேசுவதையும் அவன் விரும்புவதாக தெரியவில்லை.

கொள்ளிடக் கரை வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோவை வெய்டிங்கில் இருக்க சொல்லிவிட்டு வாடா. என்று எனக்கு முன்னால் நடந்து சென்றான் சுப்பு.

நீரற்ற ஆற்று மணல் வெள்ளத்தில் பாலத்தின் அடியில் பாதி தூரம் நடந்திருந்த போது. பாலத்தின் நிழலில் வானம் பார்த்து இரு கைகளையும் விரித்து பொத்தென விழுந்தான் சுப்பு.

பதறிப் பார்த்த எனக்கு அவன் கண்ணிலிருந்து பொல பொலவென நீர் கொட்டிக்கொண்டிருந்தது.

மெல்ல அவனுடைய சிரமங்களை சொல்ல ஆரம்பித்தான்.

எனக்கு தெரிந்து அவன் சிரமங்களை யாரிடமும் சொல்லிக் கேட்டதில்லை. இடி விழுந்த மாதிரியான சிரமம் வந்தாலும் கொஞ்சநேரம் எல்லோரிடமிருந்தும் விலகி நிற்பான். யாரிடமும் எதுவும் பேச மாட்டான். யார் பேசுவதும் அவனது காதில் விழுந்திருக்காது. பிறகு தானாகவே சமாளித்துக் கொள்வான். அன்று அவனுடைய சிரமங்களை நான் கேட்கக் கேட்க மறுபடியும் எனக்கு இவன் சுப்பு தானா என்ற  சந்தேகம் வேறு.

கடைசியாக அவன் சொன்னது, அப்பாவுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போயிருச்சி... அவசரம் அவசரமா ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனோம். போற வழியில ஒரு ஆக்சிடென்ட் அதுல அப்பா, கூட வந்த அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அக்கா அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டா...

ஆறுதல் சொல்ல யாருமில்ல சிவா எனக்கு.... வாழ புடிக்கல தான்... ஆனா சாக பயமா இருக்கு. யாரையாவது தொத்திக்கிட்டு உயிர தக்க வச்சிக்கணும்னு அலையுறேன்... என்றவாறு என் சட்டயைப்பிடித்து ஆறுதல் சொல்லு ஆறுதல் சொல்லுன்னு உலுக்கி கதறி அழுதுட்டே இருந்தான்.

அவனை கட்டி அணைத்துக் கொள்வதைத்தவிர வேறு எதுவும் எனக்கு சொல்லத்தெரியவில்லை.

2 comments:

  1. //அவனை கட்டி அணைத்துக் கொள்வதைத்தவிர வேறு எதுவும் எனக்கு சொல்லத்தெரியவில்லை.//

    ஆத்மார்த்தமான அணைப்பைக்காட்டிலும் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகள் இல்லை .

    ReplyDelete
  2. நன்றி ஜீவன். உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது.

    ReplyDelete