Sunday, December 29, 2013

வழியெங்கும் மனிதர்கள்

வருந்தி அழைக்கும் குரல்.
விரும்பி செல்லும் பயணம்.
வழியெங்கும் மனிதர்கள்.
அக்காவின் அகவையொத்த
தமக்கையை தரிசித்த பூரிப்பு.
எப்போதோ கண்ட தோழியை
வெளிச்சமிட்ட மெர்க்குரி விளக்கு.
மனித கூட்டத்திற்குள் தனித்தோடும் நாய்.
போஸ்டர் உரிக்கும் மாடுகள்.
இருப்பை முழம் போட்டுத்தீர்க்க அலையும்
பூக்காரியின் கண்கள்.
அழகாய் மட்டும் குறுக்கிட்ட ஒரு தேவதை.
காதலியாய் தேட இடைமறித்த மூளை அணுக்கள்.
தந்தையின் தோளில்
பனிக்குல்லா குழந்தையின் கண்ணம்.
நரைத்துப் பழுத்த கணக்கு வாத்தியாரின் தலை.
இன்னுமா இருக்கிறான்...!!
என்று ஆச்சர்யத்தில் உறையவைத்த மனிதர்கள்.
பேத்தியின் கைப்பிடிக்குள் பத்திரமாய்
கடக்கப்பட்ட அகண்ட சாலை.
வெறிச்சோடிக் கிடந்த சாயங்கால சந்தை.
விளக்குகளால் நிறைந்த ஊட்டி ஃபிரெஷ் கடைகள்.
அவ்வப்போது தரிசித்துக் கடந்த ஆலயங்கள்.
குறுக்கிட்டு மரித்த ஆஞ்சநேயருக்கு மட்டும் அர்ச்சனை.
காணிக்கைக்காக எறிந்த சூடத்தட்டில் அர்ச்சகரின் கண்கள்.
அவ்வப்போது தங்கும் இடம்.
எப்போதும் கிடைக்கும் பாசம்.
அடங்க மறுத்த சிரிப்பொலிகள்.
புதிய உணவு... புதிய சிந்தனை.
புதிய உறக்கம்... புதிய கனவு
புதிய விடியல்... நிறைய புரிதல்கள்
திரும்பச்சொல்லும் (செல்லும்) மனநிலை
விட மறுத்த கட்டளைகள்.
திரும்ப வேண்டிய கட்டாயங்கள்
வழியெங்கும் மனிதர்கள்.

..................................................

........................................

........................

Wednesday, December 11, 2013

கனவில் பூத்த கள்ளிச் செடிகள்!!

நான் உறங்கிச் செலவழித்த

என் முந்தைய இரவுகளில் பூத்த கனவுகளில்

கள்ளிச்செடிகளும் பூத்திருக்கிறது

இப்பொழுதும் எப்போதாவது பூக்கிறது

ஒவ்வொரு முறையும் அதை

வெட்டி வீசியும் பார்த்துவிட்டேன்

விதை ஏதுமில்லை ... வேரும் மீதமில்லை

எப்படியோ பூத்து விடுகிறது .

இருள் கப்பிக்கொண்டு இமை ஆயாசம் கொள்ளும்

ஒவ்வொரு பொழுதுகளிலும்

களைவாள் தீட்டிக்கொண்டே இருக்கிறேன் .

Saturday, December 7, 2013

தரப்படுத்திக் கொள்ளும் கலையறிதல்

உன் இருப்புகளை யெல்லாம் கட்டிக்கொண்டு
பயணக் குதிரையில் ஏறிவிட்டாய்.

ஆசீர்வதிக்கப்பட்ட இறுமாப்பில்
உன் பயணத்தின் மீது உனக்குமே நம்பிக்கையிருக்கிறது.

இடையில் பின்னப்படும்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிய
கூர்மழுங்கா கத்தியொன்றையும்
தாங்கியிருக்கிறது உன் இடுப்பு.

வேகம் குறையாமல்
சீராய் பாய்ந்து தாக்கும்
துப்பாக்கி ரவைகள் பற்றி
எந்த முன்னேற்பாடுகளும்
உனக்குள் இல்லை.

உன் பாதைகளில் பதிக்கப் பட்டிருக்கும்
கண்ணிவெடிகளை மோப்பம் பிடிக்கும் ஆற்றல்
உன் குதிரையிடம் இல்லை.

உன் இருப்புகளை அவிழ்த்துவிடும்
தருணங்களிலெல்லாம்
சூட்சும முடிச்சுகளை அறுத்தெறிந்து
உன் இருப்பின் எடை கூட்டிக் கொள்கிறாய்.

உன் இடுப்பில் தொங்கும்
கத்தியின் முனை மழுங்கிவிட்டதாக
எண்ணிக் கொண்டிருக்கும்போதே
உன் இருப்பின் கணம் கூடிவிட்டதாக
உணர்கிறாய்.

சுமந்துபோக குதிரை இருக்கிறது என்றபோதிலும்
துப்பாக்கி ரவைகளைப் பற்றியும்
கண்ணிவெடிகள் பற்றியும்
சிந்திக்கத் துவங்கியிருக்கிறாய்.

செயலற்ற செயல்

எப்போதும் போலவே கடந்துபோகும் நாளொன்றை
எனக்கான நாளாக தீர்மானம் கொண்டு
வாழ்த்துக்களால் இட்டு நிரப்புகிறாய்.

என் பசியின் வலி புரட்டி வீசும் வார்த்தைகளை
உன் காதுகளுக்குள் செலுத்தவிடாமல்
உன் அலைபேசியின் எதிர் உரையாடலுக்கு
பதிலளித்துப் போகிறாய்.

என் மூளை நரம்புகள் ரத்தம் கசிந்து
உறைந்து கிடந்தபோது
உன் பிரார்த்தனை கூச்சல்களை
என் செவிப்பறை ஏற்க மறுத்து இடைநிறுத்துகிறது.

எவ்வித முன்னேற் பாடுகளுமின்றி
என் பூதஉடல் பிரிந்த உயிர் பற்றி
சற்றே சோர்வுற்றிருப்பாய்.

பாவம் நீ...

என் சிதைக்கு மேல் சீராக அடுக்கப் பட்டிருக்கும்
காட்டு மரக்கட்டைகள் கருகிச் சரியும் போது.
உன் ஆழ்ந்த இரங்கலை சொல்லிவிட்டுப்போ...

உணர்தல்

நீள்வட்ட காட்டுப் பாதைக்குள்
ஆயுதங்கள் ஏதுமின்றி சுற்றித் திரிகிறாய்.

உன் இலக்கின் நீள்வெளி இன்னும் உனக்கு
தெரியாததாயிருக்கிறது.

கர்ஜிக்கும் குரல்களை நீ
மொழிபெயர்த்துக் கொள்ள மறுக்கிறாய்.

சிறுத்தைகளின் வேகம் உணராமல்
உன் நடையின் வேகம் கூட்டிக் கொள்ள மறுக்கிறாய்.

கூர் கொம்புகளுடன் உனைத் துரத்தும்
காண்ட மிருகக் கூட்டங்களை
ச்சூ எனக் கையசைத்து விரட்டிவிட முனைகிறாய்.

உன் பாதையில் கிடக்கும் இலைச் சருகுகளின் அசைவு
கருநாகம் தொடர்வதைப்போல் நீ உணரும்போது
உன் இலக்கின் அடையாளம் தென்படுவதான மாயையில்
உன் கால்கள் சற்றே வேகமெடுக்கிறது.

Friday, December 6, 2013

2013 டிசம்பர் facebook ல்

,,,

நிலாவைப் பற்றி முனியம்மாவின் கவிதை

















ஒப்புவமையிலாஅழகுப் பெண்
இரவுகளுக்கு சொந்தக்காரி
நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்
கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
இவளின்றி அமையாது கவிதை .

Wednesday, December 4, 2013

யாரோ பேசிக்கொண்டது

அவள் : என்னுள் ஊடுருவிட்ட - உன் நினைவுகளால் - நிதமும் நான்
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்.
நீயே வந்து சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை.

அவன் : உன்னுள் ஊடுருவிட்ட என் நினைவுகள் உன்னை நிதமும்
கிறுக்கச் சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.


அவள் : கடிகார முள்துலைத்து...
இந்த நிசப்தங்களைக் கடந்து...
மௌனங்களுடே பேசிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான நான் இங்கே...!!

அவன் : மௌனங்களுடன் எனக்கான நீ மெளனமாக பேசிக் கொண்டிருந்தாலும்...
உன் மௌனத்தை நான் இங்கே மெளனமாக கலைக்கச்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


அவள் : உன்னை நினைத்தொரு கவிதை எழுதவும் முடியாதொரு வறுமைக் கோட்டுக்குள்
இன்னமும் நான்...!!
மன்னித்துவிடு.

அவன் : என் அன்பையே என் அனுமதியில்லாமல் முழுமையாக களவாடிக் கொண்டவள் நீ...
இருந்தும் ஏன் அந்த வறுமைக் கோட்டுக்குள் நீ...?


அவள் : எப்போதும்,
முரண்பட்டே நிற்கும்
உன்-வார்த்தைகளுக்குள்
முற்றுப்பெறாமலே
முடிந்து போகிறது...
என்-ஒவ்வொரு இரவுகளும்...!!

அவன் : முற்றுப்பெறாத இரவுகள், ஜென்மங்களைக் கடந்ததென்றும், கடக்குமென்றும்
நீ அறிந்தது தானே...


அவள் : என் வாழ்க்கைப் புத்தகத்தின் முகவுரையும், முடிவுரையும்
நீயே எழுதிவிட்டு போ...!! pls.

அவன் : முகவுரை எழுதத்தான் எண்ணுகிறேன்...
முடிவுரை இல்லாமல்...
சாத்தியம் இல்லை தான் . இருப்பினும் உன் வாழ்கை புத்தகத்தை என்னிடம் தந்துவிடு... பத்திரமாய் இருக்கட்டும்.


அவள் : காதலில்லை என்றுசொல்லும் உனதருமை முட்டாள் பெண்ணிற்கு ...
உனக்கே உரிய பாசையில் எல்லாவற்றையும் காதலிக்கக் கற்றுக்கொடு ..plss !!

அவன் : என் நட்பை உன் நட்பிற்கு காதலிக்க கற்றுக்கொடுத்த எனக்கு...
எனதருமை முட்டாள் பெண்ணின் நட்பை. என் நட்பிற்கு,
உன் பாஷையில் கற்றுக்கொடடி பெண்ணே...


அவள் : நான் விழித்தும் ...நீ தூங்கியும் கொண்டிருப்பதால் -நம் காதல்
நிமிசமொருமுறை தூங்கி விழித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

அவன் : நீ விழித்திருந்தாலும்
நான் தூங்கிக்கொண்டிருப்பதாக நீ நினைத்திருந்தாலும்.
என் நினைவு மட்டும் நட்பாய், காதலாய் உயிர்த்திருக்கும்
நீ விழித்திருப்பது போலவே !!


அவள் : அழகான உன் சிரிப்புக்கள் நடுவே ...எதாச்சும் அர்த்தப்படுத்தி
விழித்தபடி கனவு கொள்ளும் என் முட்டாள் விழிகள் ..!!

அவன் : உன் முட்டாள் விழிகளின் உண்மை புரியாமல் நீ ஏன் பிதற்றுகிறாய் .


அவள் : எதுவும் எனக்கிங்கு புதிதில்லை ...
எல்லா வலிகளும் எனக்கே ...
எனக்கு மட்டுமே.. !!

அவன் : உன் வலிகளுக்கு மருந்தாய் நானிருக்க...
உன்னின் மித மிஞ்சிய வலியை என்னுள் பாய்ச்சிவிடும் உரிமை உனக்கிருக்க....
எப்படி எல்லா வலிகளும் உனக்கு மட்டும் சொந்தமாகும்...?
எனக்கும் தான் சொந்தம் .


அவள் : பொய்யென்று ஏதும் எனக்குள்ளில்லை...
மெய்யென்று எதுவும் .. - நீ எனக்குள் தேட ..!!

அவன் : மெய்யாய் நீ கண்டு பிடித்தவன் நான்...
அப்படியிருக்க பொய் எப்படி உனக்குள்ளிருக்கும் ...?


அவள் : காத்திருந்து...
காக்கவைத்து ...
உனக்குள் தொலைந்து விடுவதும் ஒரு சுகம் தான் ..!!

அவன் : எனக்காக நீ காத்திருந்து ...
உன்னை நான் காக்கவைப்பதினால்...
நீ அடையும் சுகத்தை மட்டும் நான் விரும்பாமல் போனாலும்.
எனக்குள் மட்டும் நீ தொலைந்து விடுவது பிடித்திருக்கிறதெனக்கு.


அவள் : என் கிறுக்கல்கள் உங்கள் கவிதைகளை
காதலிப்பதாய் ஒரு சேதி ...
எவ்வளவு தூரம் உண்மை.

அவன் : உன்னைப் போலவே முற்றிலும் உண்மை .


அவள் : ஆழ்ந்து அனுபவித்துத் தான் வருவது - காதலென்றால் ...
எனக்கும் இப்போது அதே நிலை தான்...!!!

அவன் : யாரால் உனக்கு அந்த நிலை ? ஏன் ?


அவள் : சிரிக்கிறாள்.
எனக்குள் நான் ஆழ்ந்து ...
என்னையே நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்
என்னுள் நீ இருப்பதால் தானோ?

அவன் : இதிலென்ன சந்தேகம் உனக்கு ?


அவள் : கிறுக்கிக்கொண்டே தான் இருக்கிறேன் ...
என்றாவது ஒருநாள் கவிதையாகாதா என்ற நப்பாசையில் ..!!!

அவன் : கிறுக்கல் தான் காவியமடி பெண்ணே ...
கிறுக்குவதை நிறுத்தாதே.
உன் கிறுக்கலில் தான் என் கவிதையே உயிர் வாழ்கிறது .


அவள் : எதைத்தான் பிடிக்காது இப்போ ?
உன்னைப்பிடித்த பின்பு .
எல்லாமே பிடித்துப்போகிறது.

அவன் : என்னையே பிடித்துபோய்விட்ட உனக்கு
எல்லாமும் பிடிக்கத்தானே செய்யும் ?


அவள் : நான் ஒரு மின்னல் ஆகிறேன் ...
உன் பார்வைகள் என்னுள் இடியென இறங்குவதால்.

அவன் : உன் மின்னலில் தான் நானும் மின்னுகிறேன்.


அவள் : நான் மின்னல் என்றால்
என் மின்னல்களின் வெளிச்சம் நீ ...

அவன் : ஆமாம் ...
இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.....
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.


அவள் : அவனைப் பார்க்கிறாள்.
அவன் : பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்.


அவள் : உன்- நிராகரிப்புக்களினுடே .. உயிர் விட்டமுதற் பூ -விது ...
அவன் : மெலிதாய் சிரிக்கிறான்.


அவள் : மீண்டும் - உன் பொய்யான ஏற்றுக்கொள்ளளில் கருக்கிவிடாதே..plss .

அவன் : போன ஜென்மத்தில் என் உயிர் விட்டும் கூட
என்னால் உன்னை நிராகரிக்கமுடியவில்லையே ....
அப்படியிருக்க எப்படி என் ஏற்றுக்கொள்ளல்
உனக்கு பொய்யானதாகப்பட்டது ?


அவள் : வலிமிகுந்த இந்த நிமிடங்கள்.
நொடிப்பொழுதில் கடந்து போகக்கூடும்...
நீ...........நீயாக என்னிடம் பேசும் போது மட்டுமே...!!

அவன் : நிமிடத்திற்கு நிமிடம் நான் உன்னுடனேயே பேசவேண்டும் என்று நீ விரும்புவதையே.... நானும் விரும்புகிறேன் .
ஆனால் காலம் தான் சதி செய்கிறது என்ன செய்ய ?


அவள் : மனதோடு மனம் சண்டையிட்டு
நேரில் பேசக் கேட்கும் .
நேரில் பேசக் கேட்கும் போது...
மீண்டும் சண்டை போடக் கூடுமோ ...?

அவன் : அப்படிக்கேட்டால் உன் மனதை நானும்
என் மனதை நீயும் சமாதாப்படுத்திவிடுவோம் ......


அவள் : நீ இல்லையென்று மறுதலிக்கும் ஓசையெல்லாம்
எனக்குள் ' ஆமென்றே'' ஒலிக்கிறது ...!!
எனக்கேதுமில்லை... நீ அப்படியேயிரு...!!

அவன் : இல்லையென்று சொல்ல எனக்குள் ஏதுமில்லை....
எல்லாம் உன்னிடமே இப்பொழுது.


அவள் : இடியென எல்லாவற்றையும் என்னுள் இறக்கிவிட்டு
இரக்கமற்று அங்கே நீ ...!!
இங்கே நானொரு மழைக்கால மேகமாய் .
நிதமும்,கண்ணீருக்குள் தொலைந்தே போகிறேன் ...!!!

அவன் : மின்னலாய் கூட காண முடியாத தூரத்தில் அங்கே நீ ..!!
மழைக்கால மேதுமில்லை இங்கே.... விழிநீர் மழை வெள்ளமாய் கரைபுரல்கிறது.


அவள் : நான்... நீ ....நாமிருவராகி ...செய்த முதல் தப்பு காதலகிற்று ...!!!
அவன் : ஆகிவிட்டு போகட்டும்விடு ....
இதுதான் காதலென்று நாமும் கற்றுக்கொண்டோமே...


அவள் : தெரிந்து தெளிவாய் குழப்பிய குழப்பத்தில் நீ...
குழப்பத்தின் தெளிவில் நான் ...!!!!

அவன் : ஆமாம் ........இப்பொழுது நானும் தெழிந்தவனாய் உன்னில் .


அவள் : நம்மை அழித்து விடுவார்களோ...?
அவன் : அழியாத பக்கங்கள் நாம் .


அவள் : உங்கள் திறமைகளைக் கண்டே நீள்கிறது எனது ஆச்சர்யங்கள்.
அவன் : நீ பிரசவிக்கும் வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கிறது என் திறமை...
உன்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும் ஆச்சர்யக்குறியாய் இருந்துவிட்டுப் போகிறேனே.....!!!


அவள் : நீ யார் ?
அவன் : நான் ....
நான் மட்டுமல்ல .....நீயும் கலந்தவன் .


அவள் : யாருமே நுழையமுடியாதபடி பூட்டி வைத்த - என்மனக்கதவின் ...
எந்த வழி நீ நுழைந்தாய் ..?
இன்னும் அதே மயக்கத்தில் நான் ..!!!

அவன் : போன ஜென்மத்தில் நீ என்னிடம் கொடுத்து சென்றிருந்த
கவிதை எனும் சாவியால் திறந்து நுழைந்தது உனக்கு தெரியாதா ...!!!
மயங்கடி பெண்ணே ....என்னால் மட்டுமே நீ மயங்கவேண்டும் .


அவள்: நான் வைத்துக்கொண்டு இல்லையென்றால் உனக்குப்பிடிக்கிறது ...
நீ இல்லையென்று வைத்துக்கொண்டால் எனக்குப் பிடிகிறது ..!!

அவன் : நீ வைத்துக்கொண்டு இல்லையென்றே சொல் ...
நானும் இல்லையென்றே வைத்துக்கொள்கிறேன் ...
நன்றி மட்டும் உனக்கு .


அவள் : நீங்கள் யார் ? எங்கிருந்து வந்தீங்க ?
அவன் : உன்னிலிருந்து தான் ... ஏன் உனக்கு தெரியாதா ?


அவள் : சிரிக்கிறாள்.
அவன் : உன் ஒற்றை சிரிப்பை மட்டுமே பதிலாய் அளிக்கிறபோதிலும் எனக்குள் கவிதை விந்தை பாய்ச்சுகிறாயே.....!!!


அவள் : மறுபடியும் சிரிக்கிறாள். வார்த்தைகள் வரமறுக்கும் தருணங்களில் ...இந்த சிரிப்புக்கள் மட்டுமே எனக்கு கை கொடுக்கின்றன ...tnx for சிரிப்புக்கள் .

அவன் : சிரிக்கிறான்.


அவள் : ஆச்சரியங்களினுடே தொடர்ந்து செல்லும் நம் ஒவ்வொரு நகர்வுகளும் .....நகரட்டுமே விட்டுவிடுகள்.

அவன் : ஆமாம் நான் அப்படித்தான் விட்டுவிடப்போகிறேன் .


அவள்: மௌனியாயிருக்கிறாள்.

அவன் : நீ என்னுடன் பேசாத நேரங்களில் கூட நான் மட்டும் உன்னுடன் பேசிக்கொண்டுதானிருப்பேன்...
என்னால் மட்டும் முடியும் ....
உன்னுடன் மட்டும் அப்படி பேச .
உன்னை போலவே எனக்கு இப்பொழு வார்த்தைகள் வரமறுக்கிறது ...


அவள் : விருப்பு வெறுப்புக்கள் ஊடே
பிடிவாதங்களும்.. லட்சியங்களும் மென
மூட்டை கட்டிவைத்துவிட்டு ...
கனவுகளைச் சுமந்தபடி
நகரமறுக்கும் என் நாட்கள் ...

அவன் : உன் பிடிவாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு.... என் கனவுகளுடன் பயணிக்க புறப்படடி பெண்ணே...என் கனவுகளுடன் உன் கனவுகளையும் சேர்த்தே சுமக்கிறேன்.


அவள் : தோல்வியில்லா காதல் வேண்டும்..
தோற்றாலும்....
தோல்வியிலா உன் நினைவுகள் என்றென்றும் வேண்டும்.!!

அவன் : தோல்வியே இல்லாத காதல் தான் இது ...அப்படியே தோற்றாலும் சேர்ந்து வாழ்தல் தான் காதலில் வெற்றியா....? பிரிந்து படுதலும் காதலில் வெற்றி தானடி பெண்ணே.


அவள் : முற்றுப் புள்ளியிட்டு முடித்துவிட முடியவில்லை...
அப்படியும் இருக்குமோ? ....? இல்லைக்
காலத்தே இழுத்துச் சென்று...
கண்ணீரில் முடித்துவிடவும்... நினைக்குமோ?

அவன் : முற்றுப்புள்ளியிட்டு முடித்துவிடமுடியாததுதான்...
காலத்தே இழுத்து சென்று கண்ணீரில் முடிந்து போனால் போகட்டும் விடு.


அவள்: காற்றில்லா சுவாசம் எப்படி நிகழும் ?
கண்ணீர் இல்லாக் காதல்....??
கண்ணீர் இல்லாக் காதலைக் கற்றுக்கொடுங்கள்...!!!

அவன் : காற்றே தேவை இல்லை !!
உன்னை நானும், என்னை நீயும் சுவாசிப்பதால்....
கண்ணீர் இல்லாக்காதலை நான் உனக்கு
கற்றுக்கொடுத்துவிட்டேன் .


அவள்: உன்னைக் கவியெழுத ...
ஆயிரம் சொற்க்களுடே அணிவகுத்து ..
கவி வகுத்து களைத்தாயிற்று...
எதுவும் உனக்கு உவமையற்று..தோற்றே போகிறது.
முடிவில்லா இப்பயணம்.
முடிந்தவரை
என் அன்பை உன்னிடமே விட்டுச் செல்லட்டும்..!!
காலங்கள் அத்தனையும் உணர்த்தட்டும்
உனக்கே உரியவையாய்..!!!

அவன் : அணிவகுத்த ஆயிரம் சொற்களுக்கும் ...
கவி வகுத்து களைத்த உன்னையும் ..
வணங்கி வெண்சாமரம் வீசாமல் போவேனோ ...?
எனக்கான உவமையாய் உன்னைப் பொருத்திப் பார் ...
நீ மட்டும் தோற்று போகமாட்டாய் ...
நாமிருவரும் வென்றே இருப்போம் .
என் அன்பையும் , நன்றியையும் அன்றி
உனக்கு தர என்னிடம் வேறேதுமில்லை .


அவள் : வாழ்கையில் எல்லாமே கடந்தாயிற்று ...
காதல் ஒன்றைத்தவிர...
அடிக்கடி நீச்சலிட்டு தோற்றுபோவதும் இங்கே தான்..!!!

அவன் : காதலில் மட்டும் நீ நீச்சலிட்டு தோற்று போவதையே நான் விரும்புகிறேன் .
இந்த இடத்தில் மட்டும் நான் சுயநலவாதி என்பதில் எனக்கு தாழ்வேதும் இல்லை ....


அவள்: காதலும் கற்று மற...
அவன்:  மறந்துவிட்டால் காதலில்லை ...


அவள் : காலம் எனக்கு வாழ்வு தந்தால்...
என் உணர்வு முழுக்க நேசித்து காதல் செய்வேன்...

அவன் : என் உணர்வை உன் உணர்வு நேசிக்க காலம் கண்டிப்பாக நமக்கு வாழ்வு தரும்
ஆகையால் காதலி .


அவள்: எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது வாழ்கையே வெறுத்துப் போகும் ...
நிதானப் படுத்திக்கொள்ள ..சில உண்மைகளையே நாடிச் செல்லும் மனம்...
என்னையே நான் தேடி கொண்டு தான் இருக்கிறேன் .

அவன்: என்னில் தொலைத்துவிட்ட உன்னை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாய்...
உன் எதிர்பார்ப்புகளை அர்த்தமுள்ளதாக்கிகொண்டு ...
வெறுத்துப்போகும் வாழ்கையை வெறுத்துவிடு.


அவள் : வாழ்கையை காதலிக்க தொடங்கும் போது வாழ்கையே முடிந்து விடும்..
அவன் : முடிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் ...


அவள்: கவிதைகளை காதலித்து ..
கணணி முன் கழியும் நாட்கள்...
கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ...
அழகு குறைந்தே போகிறதாம்..:
இனி வேண்டவே வேண்டாம் ..நிறுத்திவிடு!! ..
இது அம்மா..

அவன் : உன் அம்மாவிடம் சொல் ...
என்னவன் என்னை சுற்றியுள்ள கருப்பை வெளுக்கசெய்தவன் என்று .....
என்னை அழகாக்கியவனும் , அர்த்தமுள்ளவனாக்கியவனும் அவன்தானென்று.


அவள்: என் தனிமைப் பொழுதுகளை தாங்கி நிற்கும் - உன் நினைவுகள் ..
நினைவுகளுடே நிலைத்து நிற்கும் - என் சுகமான கனவுகள் ...!!!

அவன் : உன் தனிமை பொழுதுகளுடன் நான் உன்னுடன் கலந்திருப்பதை நீ அறியாமல் போனது ஏனோ ...?
உன் சுகமான கனவிற்கு காரணம் உன்னுடன் நான் கலந்திருப்பது தானோ...?


அவள் : என் வாழ் நாளின் இறுதி மணித்துளிகள்........
கணக்கிட்டு பார்த்துகொள்கிறேன்....................
.......................................................................
.......................................................................

அவன் : நீ கணக்கிடும் ஒவ்வொரு மனித்துளிகளுக்குள்ளும்
நானும் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாமல் உனது எண்ணிக்கையை தொடர் ...


அவள் : என்னை எழுதவைத்து ..காத்திருந்து பதில்களாய் வரும் நீ..
இன்றுமட்டும் காக்கவைத்து வரமறுப்பது ஏனோ?...!!!!!

அவன் : உன்னை எழுதவைப்பதற்க்காகவே நான் உன்னை காத்திருக்க வைத்திருப்பேனோ... ?
உன் எழுத்தில் தானே உன் ....சாரி ...சாரி... நம் எதிர் காலமே அடங்கி இருக்கிறது .


அவள் : எதிர் பார்க்காத வேளைகளில் என்னுள்
நீ கவிதையாகிறாய்.

அவன்: என் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் நீ கவிதையாய் ஒழிந்திருக்கிறாய்...
கவிதையாய் நாமிருவரும் பேசிக்கொண்டது பசுமையாய் இப்போதும்..... எப்போதும் .


அவள் : என் கல்லறைஎங்கும் - உன் கண்ணீரால் குளிப்பாட்டி ...
வெள்ளை ரோஜா மலர்கொண்டு - மணம் வீசி விட்டு போ...

அவன் : நாம் ஈருடல் தான்....
உயிர் ஒன்றே என்பதை நினைவு படுத்துகிறேன் உனக்கு...


அவள் : ஏய் சின்னப் பெண்ணே ,
என்னாச்சு உனக்கு ?
கரம் குவித்து ...
பூக்களுக்குள் முகம்புதைத்து ...
ஏன் அழுகிறாய்....??? okii
அழுது தீர்த்து விடு...

அவன் : மௌனமாய்.... ஆறுதல் வார்த்தைகள் தேடிக்கிடைக்காமல்...

Tuesday, December 3, 2013

நரகாசுரனின் ஆவி

கதை எழுதத்தூண்டியது : குமரேசன் அசாக் அய்யா அவர்கள் .
தலைப்பு உபயம் : ஈரோடு கதிர் அண்ணா அவர்கள் .
எழுதியது : : தரமான படைப்பாக வரவேண்டும் என்ற பீதியிலும் ,பேய் பீதியிலும் நான் .
(படைப்பு தரமானதா என்று தெரியவில்லை படித்துவிட்டு சொல்லுங்கள்)

பொதிமணலில் புதைந்து ஒய்யாரமாய் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள் நிரம்பிய காடு. அதைக்கடந்து சென்றால் மழைக்காலத்தில் மட்டும் கிளைகள் பிரித்தோடும் காட்டாறு (ஆறு ஒன்னு தான் தனித்தனியே ஆறுகள் ஓடுவது போல் இருக்கும் .ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடித்தனம் நடத்துவது போல்) . மற்ற நாட்களில் கானல் நீர் தவழ்ந்தோம் .

காட்டற்றின் பரந்த மணல் பரப்புகளில் ஆங்காங்கே வெட்டித் தோண்டப்பட்ட ஊற்றுக்கிணறு. வடு மூடிக்கொள்ளாமல் ஊற்றுக்கிணற்றில் ஊறிக்கிடக்கும் தண்ணீரைத்தான் குடிநீராக கொண்டுவந்து சேர்த்தாக வேண்டும் இராஜாமடம் என்ற கிராமத்து மக்கள் .

பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக மல்லிப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது .

மாண்புமிகு.முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் .இரா.வெங்கட் ராமன் அவர்கள் பிறந்த ஊர். 80 களின் கடைசியிலும் 90 களின் ஆரம்பத்திலும் இவர் பதவி வகித்தபோது இவரது தலையீட்டால் ஊர் முழுக்க குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுவிட்டது . இதை ஒரு அரசியல்வாதி செய்து கொடுத்திருந்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தச்சொல்லி இருப்பார்கள் .

முளைத்திருந்த பனைமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துவிட்டு அரசு பொறியியல் கல்லூரி ஒன்று தற்போது நடைமுறையில் .

சனி, ஞாயிறை ஒட்டிய திங்கட் கிழமையோ , வெள்ளிக்கிழமையோ பள்ளி விடுமுறை என்றால் தஞ்சாவூரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் தன் தந்தையை நச்சரித்துப் பிடுங்கி தன் தாய் வழி தாத்தா ,பாட்டி வீடான இராஜாமடத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான் குமார் .

இப்படித்தான் தன்னுடைய பத்தாவது வயதில் காலண்டுத்தேர்வு முடிந்த அன்றைய தினம் தாத்தா ,பாட்டி வீட்டிற்கு கிளம்பித்தயாராக இருந்தான் . தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தன்னுடைய தந்தை விடுப்பு எடுக்கமுடியாமல் தொடர் பணியில் ஈடுபட்டிருப்பட்டிருந்தார் .

மாலை 4 . 50 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து மீமிசல் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு டிரைவர் முத்தையாவிடம் தாத்தா பாட்டி வீட்டில் இறக்கிவிட்டுவிடும்படி பொறுப்பை ஒப்படைத்தார்..

அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் மீமிசல் செல்லும் பேருந்து நின்றால் அது குமாரின் தாத்தா பாட்டி வீட்டு வாசலாக இருந்திருந்தது . அப்படி வந்து இறங்கிக்கொண்டான் .

அன்றிரவே இவனது பாட்டி “முனியம்மா”, வேப்பமரம் குடைபிடித்திருக்கும் வாசலில் படுத்துக்கொண்டு குமாரின் தலையை நெருடிக்கொண்டே பலப்பல கதைகளுடன் ஒரு பேய்க்கதையும் சொல்லிவைத்தாள். கூடவே பணங்குட்டி, வாத்தியார்வீட்டு புளியமரம் ,பேய்மாடி பங்களா அத்துனை இடங்களுக்கும் போகக்கூடாது. போனால் பேய் பிடித்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, குமார் தூங்கியவுடன் பாட்டியிடம் , “ஏண்டி ..... அவன் லீவுக்கு தான வந்திருக்கான் ? அவன்கிட்ட போயி அங்க போகாத ..... இங்க போகாதன்னு சொன்னா .... எப்புடி அடுத்த லீவுக்கு வருவான் ?”

பாட்டி , “நீங்க சும்மாருங்க உங்களுக்கென்ன வேலைக்கி போய்டுவிங்க. நா சொன்னதெல்லாம் தூக்கிபோட்டுட்டு இந்த ராஜா பயலோட (குமாரின் கிராமத்து நண்பன்) சேந்துக்கிட்டு எல்லா எடத்துக்கும் போய்டுவான் . ஊராவூட்டு புள்ளைய அவங்க அப்பா, அம்மாகிட்ட ஒப்படைக்கிரவர உசுர கைல புடிச்சுக்கிட்டு தான் இருக்கணும்... நாளைலேருந்து ஏ.......... குமாரு ........ ஏ ................குமாரு.................... ன்னு அரை மணிக்கொருக்கா கத்திக்கிட்டே இருக்கணும் . எங்கயாச்சும் போயி மூக்கு மொவர அடிபட்டு வந்துட்டாலோ , பேய் பிசாசு புடிச்சு ஜுரம் வந்து கடந்தாலோ உங்க பொண்ணு கேப்பா , “என்னம்மா எம்புள்ளைய இப்புடி வுட்டுட்டுயேன்னு .”

நீ சொல்றதும் சரிதாண்டி என்ற முனகலுடன் மறுப்பேதும் சொல்லாமல் “பெரிய்......ய ஆளுதாண்டி நீ ...”என்று நமட்டாகவும், பெருமையாகவும் சிரித்துக்கொண்டார் தாத்தா .

அந்த விடுமுறையின் இறுதி நாட்களில் ஓடிக்கொண்டிருந்த குமாருக்கு அவனது தந்தை இறந்து விட்டதாக வந்த செய்தியை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் தஞ்சைக்கு அழைத்துச்சென்றார்கள் தத்தா, பாட்டி .

உயிர் விட்டிருந்த உடலை உட்காரவைத்து வாய் , கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதை குமார் முதன் முதலில் பார்த்தது தன்னுடைய தந்தையாகத்தான் இருந்தது . தன் தந்தையைச்சுற்றி கூட்டமாக யார் யாரோ ஏதேதோ சொல்லி அழுதது இவனையும் ஒருமுறை அழவைத்திருந்தது. அந்த வயதில் இறப்பு பற்றி அவனுக்கு அவ்வளவு தெரிந்திருக்கவில்லை . மூன்று வயது குழந்தையிடம் பேனாப்பிடித்து எழுதச்சொன்னால் எப்படி பேனா பிடிப்பதென்றே தெரியாமல் விழிக்குமோ அப்படி . அன்று மாலையே இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த தனது தந்தையின் உடலின் முன்னால் கொள்ளிச்சட்டி தூக்கிச்செல்ல இவனது தாயின் தங்கை கணவர், “அவன் சின்னப்பிள்ளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

தன்னை எங்கோ விட்டுச்செல்லப் போகிறார்கள் என்று நினைத்த குமார் , சித்தப்பா முறைவேண்டியவரிடம் , “சித்தப்பா நானும் வரேன்” என்கிறான் . வேறு பதில் சொல்லமுடியாதவராய் “வேண்டாம்ப்பா” என்று மட்டும் சொன்னார். பக்கத்திலிருக்கும் ஒருவர் “வேண்டாம் தம்பி அங்கெல்லாம் பேய் இருக்கும்” என்று சொல்ல அவன் முகம் மாறுகிறது . எதையோ தீவிரமாக யோசிக்கத்துவங்கிவிட்டான். தந்தையின் உடலை தூக்கிச்செல்வதைப்பார்த்து . தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்கிறான் .

“அப்பாவ இனிமேல் பாக்க முடியாதா ? வேண்டாம்ப்பா அங்க பேய் இருக்கும்ன்னு சொன்னாரே ஒரு மாமா ? அங்க தான் அப்பாவ தூக்கிட்டு போகப்போறாங்களா ? அன்னைக்கு ஒரு நாள் படிக்காம தெருவுல பசங்களோட ரொம்பநேரம் விளையாண்டுகிட்டு இருந்தப்போ அழைச்சுட்டு போய் coat stand டால அடிச்சி அழ வச்சிட்டோமேன்னு சமாதானப்படுத்த 6 -ம் நம்பர் பஸ்ல கூட்டிட்டு மெடிக்கல் காலேஜ் வர பேசிக்கிட்டே வந்து, பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஏதேதோ கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து திலகர் திடல் இருட்டில் கட்டிப்பிடித்து அழுதுட்டு “ஒன்னோட நல்லதுக்கு தாண்ட அப்பா உன்ன அடிச்சேன்”னு மன்னிப்புக் கேட்டாங்களே அந்த அப்பாவ இனிமேலே பாக்கமுடியாதா ?” தான் அடித்துக்கொன்ற தேள், பள்ளி, கரப்பான் பூச்சி இவைகளும் இப்படித்தானே உறவுகளை பிரிந்து அழுதிருக்கும். என்று அவனால் அல்ல. இன்று வரை நம் யாவரும் அலட்சியப்படுத்தும் விஷயம் .

வருடங்களும், வயதும் ஏறிக்கிடந்த நாளொன்றில் குமாரின் நண்பனான செந்தில், ஒரு நாள் நடு இரவு முற்றிக்கொண்டிருந்த நேரத்தில் மழைத்தூறலில் நனைந்துகொண்டே குமார் .. குமார்ன்னு கதவைத்தட்டி கிராமத்திலிருக்கும் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாக சொல்கிறான் . முகத்தில் தொற்றிக்கொண்ட பதர்ஷ்ட்டத்தையும், உறக்கத்தையும் , துடைத்துக்கொண்டு எப்படா என்கிறான் குமார்.

இப்பதான் ஃபோன் வந்துச்சி. சரி கிளம்பு போவோம் .

ந்தவந்துட்டேன் என்று கிளம்பி TVS 50 வண்டியை எடுத்துக்கொண்டு 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

லேசான மழை தூறிக்கொண்டே இருக்கிறது ,மரம், செடி, கொடிகள் அனைத்துக்கொண்டிருக்கிறது அந்த கிராமத்து சாலையை. ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவிலான சாலை அது. தூரத்தில் வலப்புறத்தில் ஏதோ அசைவதை குமார் பார்த்து நிதானமாக வண்டியை ஓட்டுகிறான் . குறிப்பிட்ட அந்த அசைவு உண்டான இடத்தில் ஒரு மாடு மேய்ந்துகொண்டிருக்கிறது.  இருவரும் திரும்பிப்பார்க்கின்றனர். மாட்டின் அருகில் வயதான பெரியவர் ஒருவர் சட்டை போடாமல் வேட்டிக்கட்டிக்கொண்டு தலையில் வெள்ளை நிற துண்டை முகம் முழுக்க மூடி இருக்கிறார். பீதியில் வண்டி பறக்கிறது .

தன் தந்தையின் இறப்பு குறித்த துக்கங்களை எல்லாம் மறந்திருந்த ஒருநாளில் குமார் செந்திலிடம் , “நைட் 2 மணிக்கு சட்டபோடாம வெள்ளத்துண்டால மூஞ்ச மூடிக்கிட்டு அதுவும் மழையில எந்த மடயண்டா மாடு மேய்ப்பான் . பேயாத்தாண்டா இருக்கும். நல்ல வேல உங்க அப்பாவோட சேர்ந்து நாமளும் போயிருப்போம்.”

“பேயாவது பிசாசாவது” என்று சொன்ன செந்தில் பின்னொருநாளில் தன்னுடைய வீட்டில் மாடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் . பொழுது போகாமல் எதேட்சையாக அவனது வீட்டிற்கு சென்ற குமாரின் கண்ணில் பாலகுமாரனின் "ஏழாவது காதல்" புத்தகம் படவே எடுத்து படிக்க ஆரம்பித்தவனுக்கு இரவு 11 மணி ஆகியிருந்தது தெரியவில்லை. வேறு புத்தகம் படித்துக்கொண்டிருந்த செந்தில் அதை முடித்துவிட்டு. “லைட்ட நிறுத்திட்டு இங்கேயே படுடா இந்த நேரத்துல போயி உங்கவீட்ல யாரையும் எழுப்பாம” என்று உரிமையோட சொல்லிட்டு படுத்து தூங்கிவிட்டான். "ஏழாவது காதலை" முடித்துவிட்ட குமார் லைட்ட நிறுத்திட்டு தூங்கிக்கொண்டிருந்தான் . எத்தனை மணி இருக்கும் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு டப்பா போல் கீழே விழுந்து ஓடுவது போல் இருந்தது. போர்வையை விலக்கி பார்த்த குமாருக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. மறுபடியும் போர்வையை முகத்தில் மூடிக்கொண்டு படுத்துவிடுகிறான். சற்று நேரத்தில் யாரோ திடு திடுவென ஓடும் சப்தம் கேட்கிறது . மாடிப்படியிலிருந்து ஏதோ விழும் சத்தமும் , ஐயோ... அம்மா... என்கிற சத்தமும் கேட்டு எழுந்து லைட்டை போட்டு பார்க்கிறான் குமார் . செந்திலை காணும் ! கீழிருந்த அவனின் வீட்டார்கள் விழித்து என்ன ஏது என்று பார்த்துக்கொண்டிருந்தனர் . “என்னாச்சி செந்தில்” என்று கேட்டவர்களிடம் செந்தில், “யாரோ என்ன தாண்டி போறாங்க , மேல ஏறி ஓடுறாங்க , போட்டு அமுக்குறாங்க” அப்புடின்னான். குமார் முகத்தில வேர்வ கொட்டுது.

மறுநாள் காலையில் கேள்விப்பட்டு செந்திலின் வீடுதேடி வந்து பார்க்க வந்த சரவணன் கிண்டலா சிரிச்சி சிரிச்சி வெறுப்பேத்திக்கிட்டு இருந்தான். அடுத்தநாள் சரவணனின் வீட்டில் எல்லோரும் ஊருக்கு சென்று விட அவனது பெரிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது என்று துணைக்கு குமாரைக்கூப்பிட்டான் . உள்புறமாக மாடிப்படிகொண்ட பெரிய வீடு அது . நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குமாரின் காலை யாரோ உதைத்து தள்ளுவது போல் உணர்ந்து எழுந்து பார்த்தான் . விடிவிளக்கின் ஒளியில் சரவணன் எங்கோ நடந்து செல்வது தெரிந்து குமார் சரவணனிடம் , “டேய்.. எங்கடா போற ? “ திரும்பிப் பார்த்து சரவணன், “டேய் தாத்தா மாடிப்படிலேருந்து தனியா எறங்கி வர்றார் கீழ அழைச்சுட்டு வரேன்”. எங்கடா என்கிறான் குமார். “அங்க பாரு குமார் வந்துகிட்டு இருக்காரு. கீழ உளுந்துட்டாருன்னா போய் சேர்ந்துடுவாருடா வுடுடான்னு மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான் அந்த இரவிலும். “டேய் உங்க தாத்தா செத்து போயி 7 மாசமாகிடுச்சிடான்னு சொன்னா கேட்க்.....கவே மாட்டேங்கிறான்.” ஒரு வழியா அவன உட்க்கார வச்சிட்டு . இருடா நான் அழைச்சுட்டு வந்து தூங்க வைக்கிறேன்னு குமார் சொன்னதுக்கப்புறம் தான் தூங்குனான் சரவணன்.

அடுத்தநாள் நண்பர்கள் மீட்டிங் ப்லேசான பாரி வீட்டில் சரவணனை நிக்கவச்சு கன்னாபின்னான்னு திட்டி.... ஓட்டி எடுத்துட்டு இருந்தான் பாரி . அப்பவும் புடிவாதமா சத்தியம் பண்ணி சொல்றான் சரவணன், “அது எங்க தாத்தா தான்னு .” நைசா பாரிக்கிட்ட போயி குமார் , “என்ன பாரி ராத்திரில தூக்கத்துல தான் அப்புடி பண்ணான்னு நினைச்சேன் இப்பவும் எங்க தாத்தா தான் அதுன்னு இப்புடி அடிச்சி பேசுறான் . ஒரு வேல பேயாத்தான் வந்திருக்காரா அவங்க தாத்தா ? “ பாரி குமார ஏளனமா பார்த்து “ஏன் உனக்கு என்னாச்சி ? நீ நல்லாத்தானே இருந்தே” . “சரி பாரி , விடு ......விடு ......... எனக்கென்னமோ இன்னிக்கு அவன தனியா படுக்க வைக்கவேணாம்னு தோணுது. உங்கவீட்டு மாடிய சுத்தம் பண்ணிவை நானும் வரேன் பய ஒரு மாதிரி தாத்தா நினப்புல பீதியாகி இருக்கான்”. அன்றைய இரவு பாரிவீட்டின் மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் பாரி, சரவணன், குமார் மூவரும் . கடிகாரத்தின் நொடி முள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது . திடீரென பாரி இரண்டாவது முறையாக அம்மா.... அம்மா....ன்னு கூப்டது கேட்ட குமார் விழித்து ஏதும் பேசாதவனாய் படுத்திருந்தான். கொஞ்சம் பயத்தில் . கீழிருந்து என்னப்பான்னு கேட்ட அவங்க அம்மாவிடம், “ஒண்ணுல்ல .... ஒண்ணுல்ல ... யாரும் வராதிங்க அங்கேயே இருங்க”ன்னு சொல்லிட்டு படுத்துவிட்டான் . மறுநாள் பாரியிடம் குமார், “ஏண்டா பாரி நேத்து நைட் அம்மாவ ரெண்டுவாட்டி கூப்ட ? “ சரவணனை கிண்டலடித்த பாரி சொல்லத்தயங்கினாலும் “ஒண்ணுமில்ல மாப்பி (மாப்ள) படுத்திருந்தனா.... ஒரு லேடி என்ன தாண்டி தாண்டி போகுது . காலால மிதிக்கிது அப்படின்னுட்டு இனிமேல் மாடில படுக்கலப்பா......”அப்டின்னதும் குமார் ஜுரத்தில் படுத்துட்டான் . ஜுரத்துல இருந்தவன பாக்க வந்த ரகு, “லே ...... இதுக்கு டாக்டர் , ஊசி, மாத்திரையெல்லாம் வேலைசெய்யாது பேசாம என்னோட வா கீழவாசல் தாண்டி கொசக்கரம்பைல போயி மந்திரிச்சுட்டு வந்துருவோம்” என்றான் . இருவரும் சைக்கிளில் செல்கிறார்கள் .

சைக்கிள் கீழவாசலை தாண்டியதும் இரண்டுபுறமும் வயல்கள் முளைத்துக் கிடந்தது. ஒரு இடத்தில் சைக்கிள் பஞ்சர் ஆனதும் என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருந்த ரெண்டுபேரையும் பார்த்து வண்டியில் போயிக்கொண்டிருந்த ஒருவர், “தம்பி இந்த இடத்தில் ரொம்பநேரம் நிக்காதிங்க . இது நடமாட்டம் உள்ள இடம்” என்றதும் சைக்கிளை தள்ளிக்கொண்டே ஓட்டம் பிடித்தவர்கள் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் வந்துதான் நின்றார்கள்.

தொடர்ந்து பேய் பீதியில் இருந்த குமார், தீபாவளி முடிஞ்ச ஒரு நாளின் இரவில் விஜய் டிவி யில் நடந்தது என்ன பார்த்துகொண்டிருந்தான். அதில் பேய் பற்றிய செய்தியை ஒருவர் திகிலூட்டும் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் அந்த காட்சிகளும், குரலும் சற்று பயமாகவே இருந்தது. இடையில் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறவரான விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவிகள் கட்டாயம் இருக்கிறது என்று முடித்திருந்தார். இன்னிக்கி நைட் எப்படி தூங்க போகிறோம் என்று பயத்துடன் படுத்திருந்த குமார் , தீபாவளிக்கு வாங்கின புதிய முண்டா பனியனுக்கும் பின்னாடி ஒட்டியிருந்த சில்வர் எனாமல் floresent ஸ்டிக்கரை பிச்சி தூக்கி போடாம செவுத்துல ஒட்டிவச்சிருந்தான் புரண்டு படுத்த குமாரின் கண்களில் அந்த sticker இன் ஒளி.. படபடத்துப்போன குமார் தூக்கத்தை மட்டும் தூங்கவைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்து . ஃபேஸ்புக் -ல நாலு பேர்க்கிட்ட சொல்லுவோம். கொஞ்சம் பயம் தெளியும்னு பனியனின் ஸ்டிக்கர் செய்திய போட்டான் . அதுக்கு ஒரு அண்ணன் சொல்றாங்க அது நரகாசுரனின் ஆவியாக இருக்கும்னு ...

புராண காலத்தில் செத்துப்போன நரகாசுரனின் ஆவி இன்னுமா இருக்கு ? நாட்ல மனுசனவிட ஆவிகள் தான் அதிகமா இருக்கும் போலருக்குன்னு தொடர்ந்து பேய் பீதியில் குமார். .

Monday, December 2, 2013

தண்டனையா ? தடுக்கப்பட வேண்டுமா...

நூற்று இருபது கோடி மக்கள் எண்ணிக்கையை நெருங்கிவிட்ட நமது தேசத்தில், வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, சுகாதாரக் குறைபாடு, லஞ்சம், ஊழல், திருட்டு, கொலை, கொள்ளை... இவைகள் எல்லாம் அன்றாடம்.

எல்லாமும் தவிர, மெல்ல வளர்ந்துவரும் ஒரு விஷச்செடியை போல வளர்ந்து எங்கும் கிளைபரப்பி இருக்கிறது மற்றுமொரு அவலம். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை....

பெண்கள், குழந்தைகள், வயோதிக பெண்கள், ஆண் சிறுவர்கள், என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த வன்முறை.

எப்போதும் செய்திகளாகவே கடந்து போய்க் கொண்டிருந்த நமக்கு, அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நிகழ்ந்து, நம்மையும் நிலைகுலையச் செய்து விடுகிறது.

1992 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த் துறையினரால் 18 பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.

2012 டிசம்பர் 16 ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு (Gang rape) கம்பியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது தலைநகரையே ஒரு உலுக்கு உலுக்கியது. அரசியல் காரணங்களுக்காக அது ஒரு தேசிய பிரச்சனையாகவே கையிலெடுத்துக் கொண்டது அரசு. நமக்கும் அப்போதுதான் குடல் நடுங்கும் பயம் தோன்ற ஆரம்பித்தது. அரசு செலவில் சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் 13 நாட்கள் கழித்து நிர்பயா இறந்ததும் பல அவசர சட்டங்கள் நிறைவேற்றச் சொல்லி மக்கள் கொந்தளித்தனர்.

அந்தச் சுவடு கலையும் முன்னரே, 2013 ஆகஸ்ட் 22 ம் தேதி மற்றொரு இந்திய பெரு நகரமான மும்பையில் புகைப்பட பத்திரிகை நிரூபரை (photo journalist) ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்து (Gang rape) தாக்கியது. (Gang rape) எனும் இந்த வார்த்தையே அருவருக்கத் தக்கதாக இருக்கிறது.

இப்படி ஊடகங்கள் பெரிது படுத்திக் காட்டிய சம்பவங்கள் மிகமிகக் குறைவே.
இது போன்று நகரங்களிலும், பெரு நகரங்களிலும் நிகழும் சம்பவங்கள் மட்டுமே வெளியில் தெரிந்து

பெரிது படுத்தப்படுகிறது. இந்திய கிராமங்களில் நிகழும் சாதிய ரீதியிலான பாலியல் வன்முறைகள் வெளியில் தெரியாமலே மறைக்கப் பட்டுவிடுகிறது.

பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும் மனிதனால் வேட்டையாடப்பட்டு அந்த இனமே அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே இவைகளை கடவுளின் அவதாரமாக சித்தரித்து கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் கடவுளாக கொண்டாடப் படவேண்டிய பெண்களை, அதே மனித மிருகங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வேட்டையாடி அழிக்கிறது. இதை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக மட்டும் பார்க்ககூடாது. கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது, இன்று நேற்று நடப்பதல்ல.. காலம் காலமாக நடப்பது தான். வெளியே தெரியாமல் இருந்தது அவ்வளது தான். காட்சி ஊடகங்களின் அதீத வளர்ச்சி இந்தப் பிரச்சனையை பூதாகரமாக வளர்த்தெடுத்து இன்று அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும்.

2011 ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதிலும் 24,206 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கிறது. National Crime Records Bureau. (NCRB). புகார்கள் பதியப்படாமல் இருப்பது கணக்கில் அடங்காததாக இருக்கலாம் என்கிறது.

2012 லும் சரி, 2013 லும் சரி, ஐம்பது சதவிதம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்திருப்பதாக State Crime Records Bureau (SCRB) தெரிவிக்கிறது. தமிழகத்தில் இந்த குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம், வெகுவாகப் பரவிவிட்ட மதுப் பழக்கம் மிக முக்கிய பங்குவகிப்பதாக தெரிவிக்கிறது.

புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களே இப்படி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னும் புகார்கள் கொடுக்கப்படாமல் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு பயந்தும், உயிர்களுக்கும், எதிர்காலங்களுக்கும் பயந்தும் இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக பயந்தும் புகார்களாக பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆசிரியர்களுக்கு கடந்த அக்டோபர் முதல் பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 17 முதல் பயிற்சி தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சியை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அளித்து வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க.. கடந்த பல தினங்களுக்கு முன்னர். அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படம் காண்பித்ததாக எழுந்த புகாரையடுத்து 4 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாக்லேட் வாங்கித் தருவதாக பேரன் பேத்தி வயதிலிருக்கும் குழந்தைகளை, தாத்தா...

பெற்ற பெண்ணையே போகப் பொருளாக்கிய அப்பா...

பள்ளிக் குழந்தையை கடத்திச் சென்று கற்பழித்து பின் கொன்று வீசிய கொடூரன்.

இப்படியாக வீட்டிலும் வெளியிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் நம்ப முடியவில்லை என்று நினைத்தால் பல தொலைக்காட்சியில் இந்த சம்பவங்கள் குறித்து ஒருமணிநேர நிகழ்ச்சியே நடத்தப்பட்டு பஞ்சாயத்து செய்து
வைக்கிறார்கள். தெரியாதவர்கள் பார்க்கலாம்.

டெல்லி சம்பவத்திற்கு பின்னர் நாடெங்கிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் புரியும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர் அப்படி செய்துவிட்டால் குற்றம் குறைந்து விடுமா என்ன...? State Crime Records Bureau (SCRB) தமிழகத்தில் ஐம்பது சதவிகிதமாக அதிகரித்திருக்கும் பாலியல் குற்றத்திற்கு காரணம் மதுப்பழக்கம் என்றிருக்கிறபோது அதே சதவிகிதம் இந்தியா முழுவதிலும் இருக்கவே செய்யும். அரசே நடத்தும் மதுக்கடைகளை மூடினால் ஐம்பது சதவிகித குற்றம் குறையுமல்லவா... ஏனைய மாநிலங்களிலும் இதே கோரிக்கையை பெண்களும், பெண்கள் அமைப்புகளும் முன்னெடுக்கலாம் அல்லவா...  மதுவை எதிர்த்து பெண்கள் போராடுவது மிக மிகக் குறைவே.

நம் தேசத்தில் ஒவ்வொரு 20 முதல் 22 நிமிடத்திற்குள் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்கிறது NCRB.

இதனால் உலகெங்கிலும் இருந்து இந்தியா நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்துள்ளது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயை விட்டுத் தள்ளுங்கள்.

நமது தேசம் பெண்கள்வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தொலை நோக்குடன் சிந்திக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் தூக்கு தண்டனை கொடுத்தோ, ஆண்மை நீக்கம் செய்தோ இந்த குற்றங்களை குறைக்க முடியாது. தண்டனை கொடுக்கப் பட்டவன் குறிப்பிட்ட தவறை செய்ய மாட்டான் அவ்வளவு தானே...?

பெண்கள் கிளர்ச்சியை தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து வெளியில் வருவதினால் எளிதில் ஆண்கள் தவறு செய்ய தூண்டப் படுகிறார்கள் என்ற இந்த கருத்தில் நான் உடன் படவில்லை என்றாலும். பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அடுத்தவர்களின் ஆடை விசயத்தில் நாம் தலையிடுவது அனாவசியமான ஒன்று தான் என்றாலும். ஒரு குற்றம் நடந்துவிடுவதற்கு நாமும் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நமக்கு எந்த பங்கும் இருக்ககூடாது என்ற வகையில் பெண்களும் ஒரு சில விசயங்களில் உணர்ந்து செயல் படவேண்டும். பெண்கள் அமைப்புகள் பெண்களுக்கு இதை கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க நம் குழந்தைகளுக்கு நாமே நல்ல தொடுதல், (good touch,) எது (bad touch) கெட்ட தொடுதல் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இன்று இணையம் என்பது மிக எளிதில் கிடைக்கும் விசயமாக இருக்கிறது.  இணையம் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக ஒன்றி விட்டது. கையடக்க அலைபேசியின் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில தவறான விசயங்களை பார்க்க உந்தப் படுகிறார்கள். இதன் மூலம் பாலியல் உணர்ச்சிக்கு எளிதில் தூண்டப்படுகிறார்கள். இது தொடர்ந்தால் ஆபத்து. இதை கட்டுப் படுத்துவதில் பெற்றோரின் பங்கு அதிகமிருக்கிறது. சிறுவர்களுக்கு இணையப் பயன்பாட்டை முறையாக அளவாக பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.

மது மற்றும் போதைப் பொருட்களினால் பாலியல் குற்றம் அதிகரிக்கிறதென்றால் அதற்க்கு தடை விதிக்க வேண்டும். அதற்க்கு அடிமையானவர்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்களை அதிலிருந்து விடுபட வைக்கவேண்டும்.

இதையெல்லாம் தவிர பெண்ணை ஒரு சகமனுஷியாக பார்க்கவும். சுய கட்டுப்பாடும், தனிமனித ஒழுக்கமுமே இத்தகைய பாலியல் வன்முறைகள் நிகழாதிருக்க வழிவகை செய்யும்.

ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாமல் அவளை தொடுவதென்பது பாலியல் குற்றமாகும். அது அவனது மனைவியாகினும் கூட.