Monday, November 7, 2016

'இப்படிக்கு...கண்ணம்மா' என்னும் காதல்கதை.



இப்படிக்கு...கண்ணம்மா என்னும் காதல்கதை.

புத்தகம் ஒன்று. அதை நாவல் என்பதா? திரைகைதை என்பதா? நோயற்றவனின் மருத்துவக் குறிப்பு என்பதா? மருத்துவ விழிப்புணர்வு என்பதா?  ஐந்து நண்பர்களின் கதை என்பதா? அல்லது அன்றாடம் நம்மைச் சுற்றி பயணிக்கிற மனிதர்களின் கதைக் கோர்வை என்பதா? என இத்தனை கேள்விகளைப் படிக்கத் துவங்கிய முதல் ஐம்பது பக்கத்திற்குக் கேட்டுக் கொள்ளச் செய்துகொண்டே இருந்தது. ஆனால், கண்ணமா என்கிற கதாபாத்திரம் உள் நுழைந்து, அவளுடனானப் பயணம் துவங்கியவுடன் அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைப் பதிலாய் “இதுவொரு காதல்கதை” என உணர வைக்கிறது.
அப்படியென்ன காதல்கதை?
புணர்ச்சியற்றக் காதல்கதை. காமமில்லாக் காதல் நடைமுறை சாத்தியமற்றதுதான் என்றாலும், காதிலில் காமத் தியாகம் என்பதும் காதலின் உச்சநிலைதான் என்பதைப் பேசியிருகிற காதல்கதை என்றும் சொல்லலாம்.
மனித வாழ்க்கையில் இல்லாமை மற்றும் இயலாமையென்னும் வாழ்நாள் முடக்கம் எக்கணமும் யாருக்கு வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அவற்றைக் கடந்து வாழ்தல் என்பது அசாத்தியமானது. அந்நிலையைக் கடப்பதற்கு முதற்படியாக அமைவது உறவுகளின் அன்பும், அரவணைப்பும்தான். ஆனால், என்னத்தான் அவையிரண்டும் கிடைக்கபெறுகின்ற இயலாமையாக்கப் பட்டவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்துவரும். அவற்றிலிருந்து அவர்கள் வெளிவர உறுதுனையாகவும் உந்துதலாகவும் இருப்பது அவர்களது வாழ்வியலுக்கான தேடுதல்கள் மற்றும் அவர்களை அந்நிலையிலேயே ஏற்றுக் கொண்டிருக்கும் எதிர்பாலினக் காதலும்தான்.
அவ்வாறு முடங்கிவிட்ட கதையின் நாயகனான சம்பத்திற்கு அப்படிப்பட்டக் காதலாகக் கிடைப்பதுதான் கண்ணமாவின் காதல். கவிதையால் காதல் வளர்த்து, தான் முடமாவதற்கு முன்பாக சம்பத் வாழ்கிற வாழ்க்கையிலும் ஆங்காங்கே சொல்லப்பப்படுகின்ற செய்திகள் அன்றாடம் நாம் கேள்விப்படுகின்ற செய்திகள் மற்றும் பயணமாகின்ற சகமனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகக் கொண்டு செல்வது, ஆசிரியரின் அறம் சார்ந்த விசையமாகத் தெரிந்தாலும் எவ்விதத்திலும் அவற்றைப் புறந்தள்ளிவிட முடியாதையாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் கோபத்திற்கான விளக்கம் தருகிற போதும், ஆணவக் கொலையால் தன் மனைவியை இழந்து நிற்கும் நண்பரது இருட்டுலக வாழ்க்கைப் பற்றிச் சொல்கிற போதும், கணத்தச் சிந்தனையுடன் நமது அன்றாட அறங்களை யோசிக்க வைக்கிறார் லட்சுமி சிவகுமார்.
மேலும் ஆங்காங்கே சொல்லிவருகின்ற ஆசைகள், கோபங்கள், சோகங்கள், ஈழப் படுகொலைகள், இரத்ததானம், முழுவுடல்தானம், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுகின்ற உறவுச்சிக்கல்கள் என அனைத்த்தையும் கருத்துகளாக எடுத்துச் செல்லாமல் தகவல்களாகச் சொல்லிச் செல்வதும் கூட இயல்பை மாற்றாமால் வாசிக்க உதவியிருக்கிறது.
அதே போல் ஒரு சாலை விபத்திற்குப் பிறகான முதலுதவிகள் பற்றியும், அவற்றில் நமக்கிருக்கும் தெளிவின்மையும், பொறுமையின்மையும் விளக்கிச் செல்லும்போதும், குழந்தைப் பேரின்மைக்கான மருத்துவம் மற்றும் உடல் முடக்கத்திற்கான மருத்துவச் சொல்லாடல்கள் எனச் சொல்லிச் செல்வதும், மருத்துவத்துறைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிற இடங்களில் கொஞ்சம் கருத்துப் பிரச்சாரம் செய்வது போல் தோன்றினாலும், இவையும் தேவைதானே என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் விடச் சமகாலத்தில் நிகந்து கொண்டிருக்கக் கூடிய ஸ்டேட்டஸ் காதல்கள், இன்பாக்ஸ் காதல்கள் மற்றும் அதன் உரையாடல்கள் அனைத்தும் அன்றாடம் நாம் கேட்டும், பார்த்தும் வருகின்ற செயல்களாகவே இருக்கிறது. உரையாடல்களில் கவிதைகளாலான கேள்வி, பதில் பரிமாற்றங்களும் படிக்கிற போது ஒருவிதக் காதல் உணர்வுகளை நம்முள்ளும் கொடுத்துச் செல்லும் அதேவேளையில் கண்ணமாவைப் போலொரு காதலியையும், அவளது காதலையும் நம்முள் இறக்கிவிட்டுதான் செல்கிறது புத்தகம்.
மொத்தத்தில் தன்னுளிருக்கும் காதல் ஏக்கங்கள், அனுபவங்கள் மற்றும் தன்  நண்பர்கள், தனது வாழ்க்கை என அனைத்தையும் கோர்வையாக்கி நான்கைந்துப் பாடல்களுடன் படமாக எடுக்கக் கூடியளவிலான திரைகதையைதான் “இப்படிக்கு கண்ணமா” என்கிற புத்தகத்தின் மூலம் கொடுத்திருகிறார் லட்சுமி சிவகுமார்.
ஆனால், ஏற்கனவே இணையக் காதல்கள், முகம் பாராக் காதல்கள் எனப் பல திரைபடங்கள் தமிழில் வந்திருகிறது என்றாலும் இப்புத்தகத்தில் வந்திருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படுமானால் நல்லதொரு மென்மையான காதல் திரைப்படமாக அமையும். அப்போதும் தமிழ் திரையுலகம் கொண்டாடக்கூடிய ஒன்றாக இருக்காது. அப்படியே கொண்டாடினாலும் நம்மக்கள் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம்தான். வேடுமானால் மலையாளக் கரையோரம் ஒதுங்க முயற்சிக்கலாம்.


#இனியன் 

07/11/2016

ஃபேஸ்புக்கில் 

நன்றி இனியன்.

Thursday, July 28, 2016

'இப்படிக்கு... கண்ணம்மா' நாவல் குறித்து எழுத்தாளர் இளஞ்சேரல் அவர்களின் விமர்சனம்

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..”

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..
சுயசரிதையும் திரைக்கதையுமாக ஒரு நாவல்
         
தமிழில் நாவல் வடிவங்கள் நவீன வாசிப்பு முறைக்கு ஏற்பவும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் மாறிக் கொண்டு வருகிறது. தமிழில் வாசிப்பு முறைகள் உச்சத்திற்கு இருந்தகாலம் எழுபதுகளும் எண்பதுகளும். இன்றும் வாசிக்கிறவர்களுக்காக எழுதப்படுவதாக அன்றி படைப்பாளியின் தனித்துவத்தின் வெளிப்பாடுகளை அறிவிப்பதற்கும் நாவல் பயண்படுகிறது.  பிக்சன் நான் பிக்சன் லீனியர் நான் லீனியர் விஞ்ஞான அடிப்படையிலான படைப்புகள் என்பதாகவும் வந்து கொண்டேயிருக்கிறது. தொடர்கதை அல்லது தொடர்நாவல் என்னும் பகுப்பிலும் நாவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பல தேசங்களின் நிலங்களைப் பேசுவதாக கலாச்சார விழுமியங்களைப் பதிவு செய்வதற்காகவும் நாவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுத வாய்த்த நேரம் வரையிலும் நாவல் வகைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களை அறிந்திருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகளேனும் உண்டு. பொதுவாக குழுயமைவாதங்களால் நாவலின் தன்மைகள் பழிக்கப்பட்டும் தரம் திணிக்கப்படுவதாகவும் உள்ளது. ஒரு குழுவிற்கு நாவல் சிறப்பாக இருக்கிறது என்னும் பதிவு வந்துவிட்டால் அதற்கு அடுத்த எதிர்க்குழுவின் ஜால்ராக்கள் உடனடியாக “அது ஒன்றுமில்லை..குப்பை..ஐயோ...உன்னை யெல்லாம் எவண்டா எழுதச் சொன்னான்..“என்பார்கள்..தமிழச்சூழலில் முன்னணியில் இருக்கிற எழுத்தாளர் என்பவரின் சமீபத்திய படைப்புகளை வாசித்திருப்பவர்கள் கூட இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று நூலின் விலை மற்றும் அப்படைப்பாளி  சார்ந்த குழு..
       பிரச்சனைகள் இருந்தவண்ணமே இருப்பினும் எழுதுகிறவர்கள் நாவல் எழுதுகிறவர்கள் படைப்பிலக்கியத்திற்கு பாடுபடுவர்கள் இயங்கிக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். சமகாலத்தின் ஒரு சில குழுவாதிகளிட மிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக இலக்கியத்திற்கு யாரும் வரவில்லை. எப்படியிருந்தாலும் எந்த திசையின் குழுவிற்கும் ஒரு சாராருக்கும் பிடித்தமான படைப்பை எந்தப் படைப்பாளியும் தரப் போவதில்லை. நான் என் அனுபவத்தை எழுதுகிறேன்..அதற்கும் நான்கு வாசகர்கள் இருப்பார்கள் எதிர்காலத்தில் வரலாம்.வாசிக்கலாம் என்னும் உந்துதலில் சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறான். இப்பொழுதும் கூட “வரப்பெற்றோம்என்னும் பகுதியில் பல நூற்றுக் கணக்கான நூல்கள் வெளிவந்தமிருக்கின்றது. உலகம் மிகவும் பெரியது. சிற்சில குழுக்கள் அடிப்படை வசதிகளில் தங்கள் வாழ்வில் செழுமையான வாழ்வு முறைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எழுத்தும் ஏழ்மையும் சிறுபாண்மையினரின் பெண்களின் எழுத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டேயிருக்கிறது.
          தமிழில் தற்காலத்தில் எழுதுபவர்கள் இரண்டு விசயங்களின் பால் முனைப்புடன் எழுதுகிறார்கள். தன்காலத்தை தன் பண்பாட்டுக் கூறுகளை,நவீன வாழ்க்கையின் போக்குகளின் வழியாக தன் மக்களின் எதிர்காலத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற படைப்புகளை எழுதுகிறார்கள். இந்த விஞ்ஞான அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முடியாது அப்படியே அதற்காக இந்த மனித குலத்தின் வளர்ச்சியும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற நிலை, எல்லாருக்கும் எல்லாமுமாக பொதுப்பங்கீட்டு முறைகள். இயற்கை வளங்கள் பாதுக்கப்படவேண்டும். நீர்நிலைகள் அதன் வழியாக காணுயிர்களின் பாதுகாப்பு, தன் இனவிருத்தி உள்பட பல் வேறு மரபுக் கூறுகளை உள்ளடக்கிய படைப்புகள். அடுத்த விசயம் தன் தனிப்பட்ட படைப்பு வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி புகழ் பணம் வாழ்க்கை முறையில் வசதிகள் உள்ளடக்கிய சுழற்சி முறைகள் குறித்த எழுத்துக்கள் என்பதாக. நேரடியாகவே சொல்வதென்றால் திரைப்படத்துறைக்குள் நுழைவதும் அதன் மூலமாகத் தன் கருத்துக்களை தன் நவீன சிந்தனைகளை, படைப்பாக்க முயற்சிகளை மேம்படுத்துவது என்கிற முனைப்புகள் என்பதாக..
        தமிழில் கலை இலக்கிய முயற்சிகள் அனைத்துமே சினிமா எனும் மாயாஜால வாழ்க்கைக்கு என்று பேச முடியாது. ஆனால் சினிமாத் துறையின் மீதுள்ள பற்று என்பதே முக்கால்வாசிப் பேரைக் கலைஞர்களாக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்..காரணம் புகழும் பணமும் மிக எளிதில் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவதற்கான வாய்ப்புகள். தங்களுக்குப் பணம் கூட வேண்டாம் டைட்டில் கார்ட்டில் என் பெயர் வந்தால் போதும் என்று தன் உழைப்பையெல்லாம் தன் தனித்துவச் சிந்தனைகளையெல்லாம் குடிக்கும் பசிக்கும் அறைவாடகைக்கும் விற்கிற மகத்தான திறமைசாலிகளை எனக்குத் தெரியும். சென்னையிலிருந்து திரும்பி வந்தவர்களிடம் உள்ள நாவல்கள் எத்தனை தெரியுமா..தோல்வியின் எல்லாத் தழும்புகளையும் வைத்திருக்கிற ஒருவன் தன் கிராமத்தில் எப்படி பேனா பிடித்து எழுதுவான். எனினும் இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிற படைப்பாளிகள் தொடர்ச்சியாக எழுதியபடியே தங்கள் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து வருவதையும் அறிவேன். இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி நிலையில் வெத்து வேட்டுகளும் டுபாக்கூர்களும் சினிமாவில் கால் வைக்கவே முடியாது என்பதும் திறமையற்றவர்களால் எந்த நிலையிலும் வெற்றி பெறமுடியாது என்பதே இன்றைய சினிமா சூழல். இது ஒருவகையில் வரவேற்கத்தகுந்த செய்தியே. சிறந்த படைப்புகளைத்திருடுதல், கதைகளைத்திருடுதல். தலைப்புகளைத் திருடுதல். தங்கள் அறைநண்பர்களின் மிகச்சிறந்த கதைக்கருக்களைத் திருடிக் கொள்ளுதல்,திரைப்படச் சூழல்களிலும் ஒரு இளம் கதாநாயகனை வைத்து அவரைச்சுற்றி இருபது பேர் ஜால்ரா அடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்திற்காக மற்றவர்களின் சிறந்த படைப்புகளைத் தங்களுடையது என்று சொல்லி மிக சாதுர்யமாக ஏமாற்றுதல். ராயல்டியை ஏமாற்றுதல் என்னும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.
          திரைப்படத்துறையை மனதில் வைத்து எழுதப்படும் படைப்புகள் அதிகம்தான். கலை இலக்கியச் செயல்பாட்டின் அடுத்த படி சினிமாதான் என்னும் கருத்து ஆழமாக வேறூண்றி விட்டிருக்கிறது நம் படைப்பாளர்களிடம். இதற்குக் காரணம் சமகாலத்தில் புதிய நவீன சிந்தனையாளர்களின் வரவும் அவர்களுடைய இலக்கிய நண்பர்களுடனான உறவுகளுமே இந்த ஆசைக்குக் காரணம் என்றால் மிகையில்லை.
          ஒருவகையில் லஷ்மிசிவக்குமாரும் அந்த நிலையிலேயே தன் எழுத்து வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார். சினிமாவிற்கான முயற்சிகள் என்பது தீண்டத்தகாதவை அல்ல. எந்த எழுத்தாளனுடைய படைப்பும் எழுத்தும் மிகப்பரவலான அறிதல்களுக்குள் தன் சிந்தனை,படைப்பு சென்று சேரவேண்டும் என்று நினைப்பதில் நூறு சதவிகிதமும் தவறில்லை. நான் அப்படியான முயற்சிகளை முழுமனதுடன் வரவேற்கிறேன். இந்தக்கட்டுரை எழுதும் போதும் கூட பலருடைய படைப்புகள் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக “விசாரணை” இரா முருகவேளின் மிளிர்கல்.“ மற்றும் மு.சந்திரகுமாரின் “கட்டுதளையினூடே காற்று” இன்னும் பல படைப்புகள் முதல் கட்ட தயாரிப்பு முறைகளிலிருக்கிறது.
“இப்படிக்கு கண்ணம்மா..“ நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று நாவலாகவும் திரைக்கதை வடிவமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தன் வாழ்வில் ஏற்பட்ட விபத்தொன்றையும் தன் முகநூல் நட்புத் தோழியுடன் ஏற்படும் காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட நகர்வுகளுடன் நகரும் நாவல். பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலையையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த நாவல் தமிழ்நாடு-இலங்கை- தமிழினப்பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களைப் பேசுகிறது. தமிழில் முன்பு அறிந்த கே.பாலச்சந்தரின் “புன்னகை மன்னன்“ படம்தான் மிக அதிகமாக சென்சாருக்குள் சிக்கியபடம். மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால், மரியான், நந்தா, போர்க்களத்தில் ஒரு பூ உள்பட பல படங்கள் இலங்கை-தமிழ்நாடு அகதிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறது.
     திரைக்கதை வடிவங்களில் பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பை அப்படியே திரைமொழியில் படம் எடுத்து விடமுடியாது. அந்த இடத்தில் பலதுறை தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்புடன் காட்சிகள் விரியவேண்டியிருப்பதால் படைப்பாளனின் கதை அந்தந்தப் பகுதியில் சிதிலமடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. கதைக் களனும் நிலையும் பாத்திரங்கள் உலவும் இடங்களும் மிக முக்கியமாகது. ஒரு ஒற்றை வரிக்கரு மட்டுமே மிகச்சிறந்த படைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சமகாலத்தின் திரைமொழி,ரசனைச் சூழல், வியாபாரம் மற்றும் நடிகர் நடிகைகளின் கால்ஷீட்களுக்குப் பிறகு அக்கதை பல வடிவங்களில் திருத்தப்பட்டு எடுக்க ஆரம்பித்த போது ஒரு கதையும்திரைக்கதையும் எடுத்த பிறகு இனியொரு கதையுமாக மாறிவிடும் நிலையேதான் சினிமா உலகின் நூற்றாண்டு கதைகளின் லட்சணம்.
லஷ்மிசிவக்குமாரும் உள்ளிட்ட நண்பர்கள் நேரடியாகவே திரைக்கதை வடிவத்துடனும் அதே நாவலை நாவல் வடிவத்துடன் எழுதுகிற பாணி சிறப்பானது.உங்களுக்கு எதுவேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம் என்பது. சினிமாவில் கதை சொல்கிற முறைகள் மாறியிருக்கிறது. காரணம் திரையரங்குகள் இப்பொழுது முப்பது சதவிகிதம்தான் உள்ளது. நான்கு காட்சிகளுக்கும் வேறுவேறுபடங்கள் திரையிடப்படுகிறது. 3ஜி 4ஜி போன்ற நெட் வசதிகள் மற்றும் டவுன்லோட் சிஸ்டங்கள் வந்த பிறகு ரிபிட்ட் ஆடியன்ஸ் என்பது முற்றிலும் வழக் கொழிந்து போய்விட்டது. மற்றபடி இருபத்திநான்கு மணிநேர சினிமாவென தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வேறு. இவைகளுக்கும் மத்தியில் சினிமாத்துறையும் அதைச் சார்ந்த பல லட்சம் தொழில்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று படம் தயாரிக்க ஆகிற செலவுகள்,வாடகை, சம்பளங்கள்,திரையரங்கு விநியோக உரிமைகள்,சென்சார் போர்ட் பிரச்சனைகள் என தீராத பெருந்துன்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமா கிறார்கள்.மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் நல்ல உறுதியான அனுபவமிக்க தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கிற சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குரிய தாகவே உள்ளது.
          இந்தச் சூழலில்தான் தேர்வு செய்யும் கதையும் பின்னணிக் களமும் முக்கியமாகிறது.சமூகத்தின் சென்சிடிவான பிரிச்சனைகளை எடுத்து தமிழின் முக்கியமான படமாக மாற்றலாம் என்று ஒரு கலைஞன் முனைந்தால் முதலில் சந்திக்கிற பிரச்சனை அரசியல்வாதிகளின் தலையீடும் சென்சார் போர்ட்தான். அதனாலேயே மிக சாதாரணமான படங்களை எடுக்கிறபொழுது அதில் எந்த அளவு கலாரசனையின் அடிப்படையில் எடுக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அந்தப்படம்தான் பல கலைஞர்களுக்கான வாழ்க்கை எதிர்காலம்.
லஷ்மிசிவக்குமாரின் எழுத்து நடை இயல்பாகவும் தகவல்களின் கோர்வையாகவும் உள்ளது. எதிர்பாராத விபத்தொன்றில் தனது இயல்பான செயல்பாடுகளில் தற்காலிக தடை ஏற்பட்டு விட்ட பிறகு எழுத்தும் வாசிப்பும் என நகர்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளனின் உலகம் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது. நாவலின் அத்தியாயங்களில் காட்சிகளில் இணையவெளியில் காதல்,சாட்டில் உரையாடல்,திருமண ஏற்பாடுகள், குடும்பச்சூழல்கள்,இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலவரங்கள்,தன் காதலியின் குடும்பச் சூழல்கள்,இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் என நாம் தினமும் அறிந்துகொண்டிருக்கிற நாளிதழ் செய்திகளின் பின்னணியை மிகச்சிறப்பாக நம் கண்முன் நிறுத்துகிறார். திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கான ஏற்பாட்டிலிருக்கிற படித்தவர்கள் மற்றும் சென்னையில் பல்வேறு பணியிடங்களில் பணிபுரிகிற எண்ணற்ற வர்களின் வாழக்கை அம்சங்கள் நமக்குப் புலப்படுகிறது. நாவலின் களங்கள் கிராமம், ஊர்,நகரம் பெருநகரம்,இலங்கையின் பல ஊர்களின் சித்திரங்கள் கூகுளில் தேடிக்கிடைப்பது போன்ற களங்கள் கிடைக்கிறது. கதாபாத்திரங்களின் முகங்களும் பாவனைகளும் அவர்கள் பேசுகிற இலங்கைத் தமிழும் நமக்குப் பல பிரதிகளின் வழியாக கிடைத்தவையே. ஏறக்குறை இலங்கைத்தமிழ் என்பது தமிழ்நாட்டின் மாவட்டத் தமிழ் மொழிகளில் ஒன்றாகவே அறியப்பட்டுவிட்டது. நாவலின் முழுமையான கதையையும் அதன் முழுமையான சிறப்புகளையும் சொல்லி மேற்கொண்டு நாவலுக்குள் யாரும் நுழையாத வண்ணம் செய்வது அறிமுக உரை எழுதுபவனின் வேலையல்ல என்பது யாவரும் அறிவார்கள்.
           லஷ்மிசிவக்குமார் தஞ்சைத் தரணிப் பகுதி படைப்பாளராக இருப்பதால் அவருக்கு சோழநாட்டின் தமிழுக்கு நாம் கட்டியம் கூறவேண்டியதில்லை.சைவமும்வைணவமும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியப் பிதாமகர்களான கரிச்சான்குஞ்சு,பி.எஸ் ராமையா. தஞ்சைபிரகாஷ்,க.நா.சு,மௌனி,தி.ஜா, மற்றும் பல மணிக் கொடி எழுத்தாளர்கள் எழுத்துலகத்தைக் கட்டி ஆண்ட எழுத்துப் பரம்பரையின் மண். அந்த நிலத்தின் எழுத்துக்குச் சற்றும் குறைவில்லாத எழுத்துநடை. நாவலின் நெல்வயல்களும் பாசன நிலங்களும் கண்ணுக்குள் நுழைந்து கொள்கிறது. உரையாடல்களில் சிக்கனத்துடன் பேசுகிறது. நமது அலோபதி மருத்துவ முறைகளின் ஏற்படுத்துகிற “சைட் எபக்ட்கள்” பற்றிய விபரங்கள் நாவலின் உண்டு. நம் உடலுக்கு என்ன மாதிரியான மருந்துகளை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாம் போய்ச் சேர்ந்துவிடுகிற அளவு இன்று நம்மிடம் மருத்துவமுறைகள் வந்துவிட்டது. எல்லா மருத்து முறைகள் பற்றியும் விளம்பரங்கள் அதுபற்றிய தொலைக் காட்சி விவாதங்கள் எதிர்விளைகள் நமக்குப் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. என்ன ஒரே குறை நம்மிடம் பணமோ அதற்குரிய உடலோ நம்மிடம் இல்லை. மருந்துக்கடைகள்,மருத்துவமனைகள்,மருத்துவப் பணியாளர்கள் போலி டாக்டர்கள்,சித்த ஆயுர்வேத,அக்குபஞ்சர், தொடு முறைசிகிச்சை, யோகமுறை,இயற்கை வைத்தியங்கள் என்று அதற்கெனவே உருவாக்கப்பட்ட மனிதச் சமூக அங்கத்தினர்கள் வைத்தியம் செய்துகொள்கிறார்கள். இதற்கிடையில் யோகாப் பயிற்சி வேறு நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவையணைத்தும் செய்து கொள்வதற்கான நேரம் உள்ளதாவென்று தெரியவில்லை. எழுதப்படிக்கத் தெரியாத பரம ஏழைகள் பரம்பரை ஏழைகளின் பாடு தேவலை. மூன்றாது உலகப் போர்கள் தேவையே இல்லை.நம் மருத்துவமனைகளே போதும் மக்கள் தொகையை சிறப்பாக குறைத்துத்தருவார்கள் என்பது நிச்சயம். இந்த நாவலில் லஷ்மிசிவக்குமார் வலியிறுத்துகிற குறியீடாக அவரது இன்றைய இருப்பே மருத்துவத்தின் மீதான சாட்சி எனலாம். நமக்குக் கிடைக்கும் பதில் இப்படி யாராவது ஒருவருக்கு நடக்கலாம்ங்க..அதவெச்சிட்டு நாம மொத்தமா எல்லாத்தையும் குத்தம் சொல்லக் கூடாது என்பதுதான்.
         நாவல் பற்றிய விமர்சனமாகப் பேச நிறைய இருந்தாலும் கூட மிக தைரியத்துடன் இந்த நாவலை அவரே பதிப்பித்து உள்ளார். முதல் நாவல்வேறு. அதிகமாக தமிழ்நாவல்களை விமர்சிப்பதைப் போல அக்கு அக்காகப் பிரித்துப் பேசுவது சாத்தியமல்ல. நம் இதிகாசங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ராமாயணம் மகாபாரதம் பற்றிய விமர்சனங்கள் இன்றும் பட்டிமன்றங்களில் ஒலிக்கக் கேட்கிறோம்.  படைப்பு வாசிக்க மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அது நம் வாழ்வின் மீது நாமே வைத்துக் கொள்கிற விமர்சனமே. இன்னும் சொல்லப்போனால் இந்த நாவலே கூட இந்த வாழ்வின் மீது படைப்பாளி தான் வைத்த விமர்சனமே எனலாம். இன்று புதிதாக எழுதப்படுகிற எந்தவிதமான படைப்பு அம்சங்களுமே விமர்சன மரபு கொண்டவை. மகத்தான படைப்பாளர் என்று அறியப்பட்ட படைப்பாளியின் படைப்புகளைக் கூட நார்நாராக் கிழிக்கிற விமர்சகர்கள் நம்மிடம் உண்டு. ஆனால் அவர்களால் ஒரு பாராவோ பத்தியோ எழுத தெரியாது. அவர்கள்தான் விமர்சகர்கள். நூலை இலவசமாக கொடுத்துவிட்டால் அதுவே அந்தப்படைப்பாளிக்கு தான் வைத்துக் கொள்கிற ஆப்பு..நீங்கள் ஆட்டோமேடிக்காக இலக்கிய உலகத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
            லஷ்மிசிவக்குமாரும் இந்த நாவலில் சில புதுமையான கதைசொல்கிற முயற்சியை மேற்கொண்ட அதே நேரத்தில் சரளமான வாசிப்பு  முறையைக் கையாண்டிருக்கிறார். வெகுசன வாசிப்பின் சௌகரியத்திற்காக எப்பொழுதும் ஒரு நாவல் சென்று விடக்கூடாது. அதற்கென நாவல் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் அப்பணியை அவர்களுக்கு விட்டுவிடுவோம். நாவலில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களை இன்னும் பயண்பாட்டு மொழியிலேயே வைத்திருக்கலாம். நாவலுக்குள் நாவலும் சிறுகதைகளும் திரைக்கதை அமைப்புகளும் வைத்திருப்பது நல்ல முயற்சி. வாழ்வின் சுயத்தின் ஒரு பகுதியை படைப்பிலக்கியமாக மாற்றியிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழ்க் குடும்பத்தின் சமகாலப் பொருளாதாரப் பிரச்சனைகளை உரையாடல்களின் மூலமாகவே புரியவைக்க முனைந்திருக்கிறார். நாவலின் அரசியல் களத் தன்மை இல்லாத நிலை பெருங்குறையாகப் படுகிறது. இவ்வுலகில் அரசியல் பின்புலமில்லாமல் ஒன்றுமில்லை. அல்லது அரசியல் படுத்தல்கள் சம்பந்தமான தர்க்கமும் விமர்சனங்களும் தேவை. அத்துனை பிரச்சனைகளுக்குமான அரசியல் மறைபுலம் அவசியமாகிறது. அடுத்து வருகிற படைப்புகளில் இக்கருத்துகளை பரிசீலனைச் செய்தபடி மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்..எழுத வாய்த்த பொழுதுகள் அற்புதமானது. கொண்டாட்டத்தின் அம்சங்கள். அவர் விரும்பிய படியே இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்து சிறப்பு கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு கண்ணம்மா- நாவல்- முதல் பதிப்பு- டிசம்பர்-2015
விலை-200 ரூ பக்-300 வெளியீடு-முடிவிலி- கரந்தை- தஞ்சாவூர்-613002
அலைபேசி-999 4384 941-



மிக்க நன்றி சார். உங்களின் பார்வை என்னை ஊக்குவித்து, தெளிவடையச் செய்து அடுத்த கட்டத்திற்கான புரிதலைத் தருகிறது. 
என்றென்றைக்குமான நன்றியும், அன்பும் சார்.

லக்ஷ்மி சிவக்குமார் 


http://elancheral-elancheral.blogspot.in/2016/07/blog-post_28.html

Sunday, May 22, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து எழுத்தாளர் தஞ்சாவூர் ஹரணி ஐயா அவர்களின் விமர்சனம்
















உணர்வுகளில் தவித்து உணர்வுகளிலடங்கும் உயிர்…… இப்படிக்கு கண்ணம்மா… (நாவல்)

     லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பே நாவலாக உருவாகியிருக்கிறது என்றாலும் சற்று வியப்படையவைக்கிறது. ஒரு தேர்ந்த படைப்பாளனின் பொறுமை, பொறுப்புணர்ச்சி, நேர்மை இந்நாவலில் மிகச் சரியாக அளந்து தரப்பட்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதானால் நாவலில் படிக்கிற சுவாரஸ்யம் குறைந்து காணப்பட்டாலும் அதன் பொருண்மையின் கணம் நம்மை இறுகப் பிடித்துக்கொள்கிறது.  மனிதனாகப் பிறபெடுத்துவிட்ட உயிரின் தன்மை மற்ற உறவு உயிர்களுடன் கலந்து உருண்டு புரண்டு சண்டையிட்டு சமாதானமாகி அழுது சிரித்து என அடங்குவதும் இயங்குவதும்தான்.  இந்நாவலின் இழையும் இதுதான். சின்ன பொருண்மை. மெல்லிய ஒரு காதல் இணையத்தில் தொடங்கி இதயத்தில் முடிகிறது. ஒற்றைவரியில் சட்டென்று பொருண்மைகுறித்து சொல்லிவிட்டாலும் இந்த இரு முனைகளுக்கிடையிலும் கடக்கின்ற பாதைகள், நடக்கின்ற நிகழ்வுகள், பரிமாறப்படுகின்ற உணர்வுகள், தவிக்கின்ற தருணங்கள், கடக்கின்ற கசப்பான சம்பவங்கள் எனப் பரபரப்புக்கூட்டிக்கொள்கிறது இந்நாவல்.

     ஒரு படைப்பாளனுக்கு கதை சொல்லுகிற திறனும் வாசிப்போரை வயப்படுத்துகிற ஆற்றலும் சமூகவெளியின் தருணங்களை நுட்பமாகப் பார்க்கின்ற பார்வையும் அதற்கு எதிர்வினையாற்றுகின்ற வினைகளும் நம்மை இயல்பான வாழ்வின் அனுபவிப்பிலிருந்து நிறைய யோசிக்க வைக்கிறது. எவற்றையும் எதார்த்த எல்லைகளைக் கடந்துவிடாமல் சொல்லிப்போகிற லஷ்மி சிவக்குமாரின்  படைப்பாளுமை இயல்பு மட்டுமல்ல தரநேர்த்தியாகவும் இருக்கிறது. சம்பவங்களின் கோர்ப்பு நாவலின் இடையூறு மையங்களை எதுவும் தோற்றுவித்துவிடாமல் அதனதன் இருப்பில் இருப்பாகி நாவலை வலுப்படுத்துகிறது.


      படைப்பாளனின் சொந்த அனுபவத்தின் கிளை விரிப்பாக இந்நாவல் பரிணமித்தாலும் லஷ்மி சிவக்குமாருக்கு நேர்ந்திருப்பது நம்முடைய எதிரிக்குக் கூட நேர்ந்துவிடக்கூடாது. சின்ன கல் இடறல்போல நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம் இன்றைக்கு லஷ்மி சிவக்குமாரைப் புரட்டிப்போட்டுவிட்டது அகல பாதாளத்திற்குள். வலிதான். வலிகள்தான். என்றாலும் எத்தனைப் புதையுண்டாலும் கடப்பாரைக்கு நெகிழாத கற்பாறையைக்கூட சிறு வித்தின் சிறு துளிர் உடைத்துக் கிளம்பிவிடுவதைப்போல அகல பாதாளத்திலிருந்து இந்நாவலின் வழியாக  படைப்புலகின் கதவுகளை ஓங்கித் தட்டத் தொடங்கியிருக்கிறார் லஷ்மி சிவக்குமார்.  எல்லா நிலைகளிலும் நாவலுக்கான மைய இழையிலிருந்து தவறவில்லை என்றாலும் 296 பக்கங்கள் என்பது பெரும் நீட்சிதான். 100 பக்கங்களுக்கு மேலாகக் குறைத்திருக்கலாம். அந்த வலிமையும் திறனும் லஷ்மி சிவக்குமாருக்கும் நாவலுக்கும் இருக்கிறது. எனவே வாக்கிய அமைப்பில் தேவையற்ற நீட்சிகளும் நீர்த்துப்போகிற தன்மைகளும் வாசிப்போரை சற்று தடுமாற வைக்கிறது. முதல் மூன்று பாகங்களிலும் இந்த நீட்சி அலுப்பூட்ட வைக்கிறது. படிக்கிற சுவையைத் தடுக்கிறது. இயல்பாக நிகழ்ந்துவிடுகிற தருணங்களுக்கான கால அவகாசத்தில் பாத்திரங்கள் பேசி முடித்தபின்னரும் உரையாடல்கள் தேங்கி நிற்கின்றன. அதற்கான கால அவகாசத்தைத் தேடியபடி. பல இடங்களில் சிவக்குமார் முன்னிலையில் நின்று சிந்திப்பதானவை சற்று நெருடுகின்றன.  பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவற்றை அவற்றின் வழியில் இயங்கவிடுவது நாவலின் போக்கில் சிறப்பாயிருக்கும். இதுதான் சிவக்குமாரின் முதல்நாவல் என்கிற தடத்தைக் காட்டுகின்றன.

  இப்படி சிற்சில இடறல்கள் இருந்தாலும் நாவலின் வாசிப்பின் ஆர்வத்தில் தாண்டிப்போக முடிகிறது. உவமைகளும் ஒப்பீடுகளும் லஷ்மி சிவக்குமாரிடம் அபாரமாக விளைந்து செழிக்கின்றன.  இதற்குக் காரணம் சமூகத்தின் புறக்கணிப்புகளும் அவமானங்களும் ஏற்படுத்தும் காயங்களும் எந்த மனிதனையும் உத்வேகப்படுத்துகின்றன. வெப்பமேற்றுகின்றன. எனவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த வெப்பத்தை எதிர்கொள்கிற அதைவிட  பெரிதான ஓர் அனலை மூட்டுகிற ஆற்றலை லஷ்மி சிவக்குமாரிடத்து காணமுடிகிறது. இத்தனையும் தாண்டி சோர்ந்துவிடத்தான் மனம் துடிக்கும் அல்லது உயிரை விட்டு விடுதலை பெற்றுவிடலாம் என்றுதான் மனம் முடிவெடுக்கும். அதிலிருந்து முற்றிலுமாக விலகி ஒவ்வொடி அடிக்கும் ஒவ்வொரு காயத்திற்கும் தன் வலிமையான எழுத்துக்களை முன்வைத்துப் போராடுகிற லஷ்மி சிவக்குமாரைத் தமிழ்ப் படைப்புலகம் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். தயங்காமல் பாராட்டவேண்டும். முன்னெடுக்கவேண்டும் (மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்).  தன்னால் நகரமுடியாத சூழலிலும் எல்லா மனங்களிலும் நகர்ந்துசெல்கிற எழுத்துக்களால் ஓர் ஊர்வலத்தை லஷ்மி சிவக்குமார் தொடங்கியிருக்கிறார் இப்படிக்கு கண்ணம்மா நாவலின் துணைகொண்டு.


     உணர்களின் பல்வேறு உந்துதல்களையும் உறுத்தல்களையும் வெளிப்படையாக அதேசமயம் உணர்ச்சிக் குறையாமலும் காட்சிப்படுத்துகிறார். மேலும் தன் நாவலின் அத்தனை கதாபாத்திரங்களின் உணர்ச்சியையும் மதிக்கிற நேர்மையான படைப்புத்தன்மையும் லஷ்மி சிவக்குமாரிடத்து நிறைந்து வழிகிறது. உணர்வுகள் இல்லாத வாழ்க்கை வாழ்வது இயலாதென்பதை உணர்த்துகிறார். ஆகவேதான் தான் சந்தித்த புறக்கணிப்புகளையும் நெருடல்களையும் பெற்ற காயங்களையும் உணர்வின் தளத்தில் மிதக்கவிட்டு அதனைப் பரிசுத்தப்படுத்திச் செம்மையாக்கி தன் வாழ்க்கைப் பயணத்தின் உறுதியான பற்றுக்கோடாக எடுத்துக்கொண்டு பயணிப்பது மிக துணிச்சலானது. அந்த துணிச்சலின் அடையாளம்தான் இந்த நாவல்.


     இந்த நாவலின் வெற்றியென்றால் அது காட்சிப்படுத்தலும் எதார்த்தமும் வலிமையாகக் கைகோர்த்து இயங்குவதுதான்.  இன்னும் தமிழின் புதிய பக்கங்களை அடையாளப்படுத்தும் பல்வேறு படைப்புக்களை லஷ்மி சிவக்குமார் உருவாக்கிப் பதிப்பார் எனும் நம்பிக்கை இந்த முதல் நாவலின் பிறந்து தவழும் எல்லாச் சொற்களும் தந்துகொண்டேயிருக்கின்றன. வாழ்த்துக்கள் லஷ்மி சிவக்குமார்.  உங்களின் அம்மாவின் அன்பைப் போலவே உங்களின் படைப்புக்களும் பெருகிக் கிளைக்கும்.  மீண்டும் வாழ்த்துக்களுடன்.
                                                                                                   அன்புநிறைவில்
                                                                                                         ஹரணி
21.5.16  (கோடைக்காலத்தில் பூத்துக்கிடக்கும் மழைக்காலக் குளிர் போர்வையின் கீழிருந்து- பிற்பகல் 12.30 மணி)


நன்றி ஐயா 
லக்ஷ்மி சிவக்குமார் 
நூல் வாங்க 
9994384941

Friday, February 26, 2016

“தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”

“தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”



            முதலில் இந்நாவல் தமிழ்ப் படுத்தப்பட்ட  நடைமுறைகளைப் பார்த்தாள் மிக விநோதமான ஒன்றாக இருக்கிறது.

திருவிதாங்கூர் மன்னருக்காக தமிழராகிய ஜனார்த்தனன் பிள்ளை (‘பிள்ளை’ என்கிற பதம் அவர் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதைக் குறிக்கிறதா என்கிற  தரவுகள் ஏதும் இல்லை. அது அவசியமும் இல்லை. என்றாலும் இப்படி ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை) என்பவர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச் செய்ய முன்வருகிறார்.

இவர்கள் ‘ஆரட்சர்’ குடும்பம்.  அதாவது தூக்கிலிடுபவர்கள் குடும்பம். என்பதால் இவரது தந்தையும் இதே வேலையைத்தான் செய்து வந்தார். பணி ஓய்வு பெறும் நிலையிலிருக்கும்போது தன்னுடைய மூத்த மகனாகிய ராமன் என்பவரிடம், ‘நம் குடும்பம் சார்பாக இந்த வேலையை நீ செய்கிறாயா?’ என்று கேட்கிறார். அவர் இவ்வேலை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தான் தோட்டங்களிலும் கோவில்களிலும் ஏதாவது வேலைசெய்து பிழைத்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு, வேண்டுமானால் தன் தம்பியாகிய ஜனார்த்தனனிடம் கேளுங்கள் என்றும் சொல்கிறார். அவரும் தன்னுடைய இரண்டாவது மகனாகிய ஜனார்த்தனன் பிள்ளையிடம் கேட்க, முதலில் தயக்கம் காட்டுகிறார். பிற்காலத்தில் நிகழவிருக்கும் வறுமை, பஞ்சம் இவைகளைக் காரணம் காட்டி இவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதை நீ ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றும். உன் அண்ணனாகிய ராமன் திருமணம் ஆகாதவன். அவன் வயல்களிலும், கோவில்களிலும் வேலைசெய்து பிழைத்துக்கொள்வான். அப்படித்தான் அவன் சொன்னான். என்று அறிவுறுத்திய பின்னரும், பிழைப்புச் சிரமங்களை உணர்ந்த பின்னரும் ஜனார்த்தனன் பிள்ளை இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்.

மன்னராட்சி ஒழித்துக்கட்டபட்ட பின்னரும்கூட சுதந்திர இந்தியாவிலும் பணிபுரிகிறார். 1940-லிருந்து 30ஆண்டுகள். இந்த காலங்களில் ஜனார்த்தனன் பிள்ளை 117 குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையைச் செய்திருக்கிறார்.

இதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் ‘சசிவாரியர்’ என்பவர் ஜனார்த்தனன் பிள்ளையைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அவருடைய வேலை அனுபவங்களை புத்தகமாக போடும் பொருட்டு உதவிகள் கோருகிறார். முதலில் தயங்கமும் மறுக்கவும் செய்யும் ஜனார்த்தனன் பிள்ளை பின்னர் பணம் குறித்தெல்லாம் பேசிவிட்டு, ஒரு புள்ளியில் சம்மதிக்கிறார்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ஜனார்த்தனன் பிள்ளைக்கு, எழுதுவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. எப்படி எழுதுவது? எங்கிருந்து தொடங்குவது? என்கிற கேள்விக்கெல்லாம்  ஆலோசனை வழங்குகிறார். பழைய நினைவுகளை மீட்டெடுத்து உங்களுக்கு நினைவினில் உள்ளவற்றை எழுதுங்கள் என்கிறார். ஜனார்த்தனன் பிள்ளையும் அவ்வாறே செய்து குறிப்பெடுக்க ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் கனவுகளின் மூலமாகவே குறிப்பெடுப்பதாக நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி பழைய நினைவுகளை மீட்டெடுக்கையிலும், கனவுகளின் போது வந்து போகும் பழைய நினைவுகளும் ஜனார்த்தனன் பிள்ளையின் மனசாட்சியை ரொம்பவே உலுக்கியெடுக்க,  பல சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களையும், எழுத்தாளரையும் சினம் கொண்டு பேசுகிறார். குடும்பத்தில் நிம்மதி இழக்கிறது. ஒரு கட்டத்தில் இனி நான் எழுதப் போவதில்லை என்றுவிட்டு எழுத்தாளர் கொடுத்துச் சொன்ற நோட்டுப் பேனாக்களை எல்லாம் எடுத்துப் போகுமாறு சொல்லிவிட்டு, தயவுசெய்து இனி இங்கு வராதீர்கள் என்றும் கடிந்து கொள்கிறார்.

அந்த எழுத்தாளர் மறுப்பேதும் சொல்லாதவராய், ஜனார்த்தனன் பிள்ளையின் டீக்கடை நண்பர் ஒருவரிடம் அவர் கொடுத்த நோட்டுப் பேனாவையும், கூடவே தன் விலாசம் எழுதப்பட்ட ஒரு தபால் அட்டையையும் கொடுத்து, ஜனார்த்தனன் வந்து எனது விலாசம் கேட்டால் இதைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

பின்னர் தான் எழுதியது முழுமையடையாத ஏக்கம், மற்றும் குற்ற உணர்வு ஜனார்த்தனன் பிள்ளையைத் துன்புறுத்துகிறது. அது ஏதோ ஒரு நிம்மதியற்றப் போக்கைக் கொடுக்க, தனது டீக்கடை நண்பரிடம் எழுத்தாளரின் விலாசம் கேட்கிறார். அவர் எழுத்தாளர் கொடுத்துச் சென்றவற்றைக் கொடுக்கவே மகிழ்ச்சியில் எடுத்துவந்து தன் மனதில் உள்ளனவற்றையெல்லாம் முடியுமட்டும் எழுதி எழுத்தாளரின் விலாசத்திற்கு அவர் கொடுத்துச் சென்ற கடிதத்தை அனுப்பிவைக்கிறார்.

மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மூல நூலின் ஆசிரியரான சசிவாரியர், ஆரட்சர் ஜனார்த்தனன் பிள்ளையின், அவர் வேலை சம்பந்தப்பட்ட குறிப்புகளை, தன் புனைவுகளுடன் ஆங்கிலத்தில் ‘Hangman’s Journal’ என்கிற தலைப்பில் தனது பதிப்பகமான ‘பென்குயின்’ மூலம் வெளியிடுகிறார்.

எழுத்தாள பெருமக்களான கௌதம சித்தார்த்தன், சிவக்குமார், பிரசன்னா, இரா.முருகவேள் ஆகியோர்களின் பேருதவியினால்தான் இப்புத்தகம் தமிழில் சாத்தியப்பட்டதாக நூல் குறிப்பும் நூலாசிரியரும் சொல்கிறார்கள். நூல் தமிழ் படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. எளிமையான, வாசிக்க இலகுவான மொழி மற்றும் நயம்.!

நூல் குறித்து முக்கியமாக ஒன்றைச் சொல்லவேண்டும். என் போன்ற புதிதாக எழுத வருபவர்கள் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். ஏனென்றால்... மூன்றாம் வகுப்புவரையே படித்திருக்கும் ஆரட்சர் ஜனார்த்தனன் எனும் பாத்திரத்தை எழுதத்தூண்டும் எழுத்தாளரின் பாத்திரம் முக்கியம் வாய்ந்தது.

தமிழுக்கு இந்நூல் மிக அவசியமான ஆவணம்.

தமிழில் இரா.முருகவேள்.
எதிர் வெளியீடு.


லக்ஷ்மிசிவக்குமார்.
26/02/2016

தொடர்புக்கு:
Mobile: 9994384941

Sunday, February 14, 2016

"இப்படிக்கு...கண்ணம்மா" நாவலை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு... http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா




அனைவருக்கும் வணக்கம்,

"இப்படிக்கு...கண்ணம்மா" நாவலை ஆன்லைன் மூலம் பெறுவதற்கு...
கீழே இருக்கும் "டிஸ்கவரி புக் பேலஸ்" லிங்க்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
http://discoverybookpalace.com/products.php?product=இப்படிக்கு-கண்ணம்மா

Friday, February 12, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து எழுத்தாளர் வா.மு.கோமு









     ஞ்சையிலிருந்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேரும் சம்பத் என்கிற வாலிபனின் கதையை முழுமையாகச் சொல்லிச் செல்கிறது நாவல்நாவலில் நண்பர்கள் என்று ஒரே அறையில் தங்கியிருக்கும் சந்துருதிலக்சேகர்பிரபா என்ற நண்பர்களின் வாழ்வியல் சூழல் ஒவ்வொருவரின் பணிகள் என்று விஸ்தாரமாகச் சொல்ல விழைகிறது நாவல்.

ஆனால் சம்பத் என்கிற கதாபாத்திரம் அவர்களை மிஞ்சி நாவலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறதுபோக சலிப்பின்றி நாவல் பின்பகுதியில் தான் சரளமாக செல்கிறதுநாவலாசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆரம்ப தடுமாற்றம் வாசகனை உள்ளிழுத்துக் கொள்வதில் காலதாமதம் ஆகிறதுநாவல் என்றால் அப்படித்தானப்பாஎன்று சொல்வோரும் இங்கு பலருண்டு.

சம்பத் ஆரம்ப அத்தியாயங்களிலேயே விபத்தில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு சேர்க்கப்படுகிறான்விபத்துகள் சாலையில் நடைபெறுவது இயற்கை சீற்றத்திற்கு ஒப்பானது தான்பின்பாக அவன் வாழ்க்கை முழுதாக விவரிக்கப்படுகிறதுஐடி கம்பெனியில் அமர்ந்து முகநூலில் கவிதை எழுதுகிறான்டிலோனி டிலக்ஸி என்கிற பெயரில் இலங்கை தமிழ்ப்பெண் ‘உங்கள் கவிதை அட்புதம்’ என்று உள்பொட்டியில் பேச வருகிறதுபின்பாக இருவரும் கவிதை பரிமாறிக் கொள்வதாகவும்டாய் டேய் என பேசிக் கொள்வதுமாக நாவல் சுறுசுறுப்படைகிறதுடிலோனி டிலக்ஸியின் வீட்டுப் பெயர் கண்ணம்மாமெதுவாக போனில் பேசிக்கொள்ளும் வரை வருகிறார்கள்.

விபத்தில் சம்பத்துக்கு முதுகுத் தண்டு வடத்தில் முறிவு ஏற்பட்டு நடக்க இயலாதவனாகி விடுகிறான்.மருத்துவமனையில் சமபந்தமாக விவரணைகள் பல சொல்லப்படுகின்றனகண்ணம்மா சம்பத்தை தேடி இலங்கையிலிருந்து வந்து சேர்கிறாள்விபத்திற்கு காரணகர்த்தாவானவர் தன் பெண்ணை சம்பத்தின் வீட்டில் அவரது குற்ற உணர்ச்சிக்காக விட்டு விட்டு செல்ல ஆசை கொள்கிறார். ’அதுக்குத்தான் நான் வந்திருக்கிறன்அந்த இடம் எனக்கு எண்டு அவரிடம் சொல்லி விடுங்கள்’ கண்ணம்மா சொல்லுமிடத்தில் நாவல் நிறைவு பெற்றதாக நான் நினைக்கிறேன்ஆனால் கதை கதையாக மேலும் தொடர்கிறது.

பெரும்பாலும் தமிழில் முந்தைய காலகட்டம் போலில்லாமல் பல வடிவங்களில் நாவல்கள் சொல்லப்படுகின்றன.நாவல் வாசிப்பாளர்களும் எப்போதையும் விட அதிகம் தமிழில் உள்ளார்கள்நாவலாசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் களங்களும் புதிது புதிதாக இருக்கிறதுமொழிபெயர்ப்புகளையே சமீப காலங்களில் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த நாவலை வாசித்தது ஒரு புதிய அனுபவம் தான்நாவலில் சில அத்தியாயங்கள் சிறுகதைகளுக்குண்டான நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றனநாவலாசிரியர் லஷ்மி சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்!


இப்படிக்கு கண்ணம்மா (நாவல்விலை 200. பிரதிகள் வேண்டுவோர் பேச : 9994384941


வா.மு.கோமு.
02/02/2016
******

http://vaamukomu.blogspot.in/2016/02/blog-post.html

நன்றி ப்ரதர்

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

Tuesday, February 9, 2016

தமிழ் இந்து வில் "இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் அறிமுகம்



கடந்த ஜனவரி 3௦ (சனிக்கிழமை)  2௦16, "தமிழ் இந்து" நூல்வெளி பகுதியில் எனது நாவலை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
நன்றி தமிழ் இந்து.





புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911


Thanjavur Branch

Monday, February 8, 2016

"இப்படிக்கு... கண்ணம்மா" நாவல் குறித்து கவிஞர் யாழி கிரிதரன்.



சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது காலை பதம்பார்க்கும் ஒரு கல்லை நம்மில் எத்தனைப்பேர் எடுத்து தூர போட்டிருப்போம், நம் காயத்திற்கான மருந்திட்டு கடந்தவர்களே அதிகம். அதிலிருந்து விலகி நடந்திருக்கிறார் லஷ்மிசிவக்குமார்.

தான் சந்தித்த விபத்தை, அதிலிருந்து மீண்ட கதையை, புனைவுகளுடன் நமக்களித்த
"இப்படிக்கு... கண்ணம்மா" லஷ்மிசிவக்குமாரின் முதல் நாவல்.

இன்றைய நவீன உலகம் கட்டமைத்துள்ள வாழ்வியல் யதார்த்தங்களே கதைக்களம். முகநூல் வழி தொடங்கும் ஒரு உரையாடல் காதலாகுதல் என வழக்கம் போல் என்றாலும் அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

ஒரு விபத்து ஒருவனை எப்படி முடக்கும் என்பதும். அதிலிருந்து அவன் மீள்வது என்பது எவ்வளவு பெரிய துயர் என்பதைதான் வலியுருத்துகிறது இந்நாவல்.  அடிப்பட்ட ஒருவரை எப்படி தூக்க வேண்டும் எவ்வாறு கையாளவேண்டுமெனவும் பேசுகிறது இந்நாவல்.

ரத்தவகைகள், உறுப்பு தானம், உடல் தானம் பற்றி நூலில் இருந்தாலும் எங்கும் பிரச்சார நெடி அடிக்கவில்லை. போகிற போக்கில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டதிற்கு அவசியம் தேவைப்படும் குறிப்புகள் அவை.

கழிவிரக்கத்தாலோ, முகஸ்துதிக்காகவோ சொல்ல முடியத நடையில் எழுதியிருக்கும் லஷ்மி சிவக்குமாருக்கு வாழ்த்துகள்.
அதிக கதாபாத்திரங்கள் கதையோட்டத்திற்கு தடையாக இருக்கிறது அடுத்த நாவலில் பார்க்கலாம்.
அவசியம் வாசியுங்கள் அவருக்கான அடுத்த நாவலுக்கான நீர்வார்த்தல் அதுவாகத்தான் இருக்க முடியும்.

யாழி கிரிதரன் 
22/1/2015

அன்பும் நன்றியும் யாழி.


















முடிவிலி வெளியீடு,
விலை 200ரூ
9994384941

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch



Thursday, February 4, 2016

இப்படிக்கு... கண்ணம்மா நாவல் பற்றி ஆசிரியர் ஜெயக்குமார்

என்னுடைய முதல் நாவலான "இப்படிக்கு... கண்ணம்மா" பற்றி... ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

     சிறுவயதில் நாங்கள் பயங்கலந்த மரியாதையுடன் பார்த்து வளர்ந்தோம் இந்த ஆசிரியரைப் பார்த்து. பின்னரொரு நாளில் நான் நாவல் எழுதியிருப்பதாக என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட எங்கள் ஆசிரியர், புத்தக வெளியீட்டு தினத்தன்று வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை என்பதை நேரில் வந்து சொன்னதும் தான் தெரிந்தது. சாருக்கு எப்படி தெரியும் என்று.! இவர் மாணவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் மட்டுமல்ல. தமிழின் மீது பற்று கொண்டவர். மனிதர்களைக் கொண்டாடும் பண்பு உள்ளவர். பல பயணங்களை வகுத்துக்கொண்டு அந்த பயணத்தின் மூலம் எளிய மனிதர்களின் திறமைகளை தன்னுடைய வலைப்பூவில் பரப்புகிறார். அடிப்படையில் இவர் எங்கள் பகுதியின் இரண்டாவது புகழ் வாய்ந்த கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்க நன்றி சார்.
லக்ஷ்மி சிவக்குமார்

()()()

முடிவிலி வெளியீடு
கரந்தை,
தஞ்சாவூர்.

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch






நாவல் பற்றிய ஜெயக்குமார் சாரின் சுட்டி. post_6.html http://karanthaijayakumar.blogspot.com/2016/01/blog-post_6.html


அதியற்புத தருணம் :)