Saturday, December 7, 2013

செயலற்ற செயல்

எப்போதும் போலவே கடந்துபோகும் நாளொன்றை
எனக்கான நாளாக தீர்மானம் கொண்டு
வாழ்த்துக்களால் இட்டு நிரப்புகிறாய்.

என் பசியின் வலி புரட்டி வீசும் வார்த்தைகளை
உன் காதுகளுக்குள் செலுத்தவிடாமல்
உன் அலைபேசியின் எதிர் உரையாடலுக்கு
பதிலளித்துப் போகிறாய்.

என் மூளை நரம்புகள் ரத்தம் கசிந்து
உறைந்து கிடந்தபோது
உன் பிரார்த்தனை கூச்சல்களை
என் செவிப்பறை ஏற்க மறுத்து இடைநிறுத்துகிறது.

எவ்வித முன்னேற் பாடுகளுமின்றி
என் பூதஉடல் பிரிந்த உயிர் பற்றி
சற்றே சோர்வுற்றிருப்பாய்.

பாவம் நீ...

என் சிதைக்கு மேல் சீராக அடுக்கப் பட்டிருக்கும்
காட்டு மரக்கட்டைகள் கருகிச் சரியும் போது.
உன் ஆழ்ந்த இரங்கலை சொல்லிவிட்டுப்போ...

No comments:

Post a Comment