Tuesday, December 3, 2013

நரகாசுரனின் ஆவி

கதை எழுதத்தூண்டியது : குமரேசன் அசாக் அய்யா அவர்கள் .
தலைப்பு உபயம் : ஈரோடு கதிர் அண்ணா அவர்கள் .
எழுதியது : : தரமான படைப்பாக வரவேண்டும் என்ற பீதியிலும் ,பேய் பீதியிலும் நான் .
(படைப்பு தரமானதா என்று தெரியவில்லை படித்துவிட்டு சொல்லுங்கள்)

பொதிமணலில் புதைந்து ஒய்யாரமாய் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள் நிரம்பிய காடு. அதைக்கடந்து சென்றால் மழைக்காலத்தில் மட்டும் கிளைகள் பிரித்தோடும் காட்டாறு (ஆறு ஒன்னு தான் தனித்தனியே ஆறுகள் ஓடுவது போல் இருக்கும் .ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடித்தனம் நடத்துவது போல்) . மற்ற நாட்களில் கானல் நீர் தவழ்ந்தோம் .

காட்டற்றின் பரந்த மணல் பரப்புகளில் ஆங்காங்கே வெட்டித் தோண்டப்பட்ட ஊற்றுக்கிணறு. வடு மூடிக்கொள்ளாமல் ஊற்றுக்கிணற்றில் ஊறிக்கிடக்கும் தண்ணீரைத்தான் குடிநீராக கொண்டுவந்து சேர்த்தாக வேண்டும் இராஜாமடம் என்ற கிராமத்து மக்கள் .

பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக மல்லிப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது .

மாண்புமிகு.முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் .இரா.வெங்கட் ராமன் அவர்கள் பிறந்த ஊர். 80 களின் கடைசியிலும் 90 களின் ஆரம்பத்திலும் இவர் பதவி வகித்தபோது இவரது தலையீட்டால் ஊர் முழுக்க குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுவிட்டது . இதை ஒரு அரசியல்வாதி செய்து கொடுத்திருந்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தச்சொல்லி இருப்பார்கள் .

முளைத்திருந்த பனைமரங்களை எல்லாம் வெட்டிச்சாய்த்துவிட்டு அரசு பொறியியல் கல்லூரி ஒன்று தற்போது நடைமுறையில் .

சனி, ஞாயிறை ஒட்டிய திங்கட் கிழமையோ , வெள்ளிக்கிழமையோ பள்ளி விடுமுறை என்றால் தஞ்சாவூரில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் தன் தந்தையை நச்சரித்துப் பிடுங்கி தன் தாய் வழி தாத்தா ,பாட்டி வீடான இராஜாமடத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான் குமார் .

இப்படித்தான் தன்னுடைய பத்தாவது வயதில் காலண்டுத்தேர்வு முடிந்த அன்றைய தினம் தாத்தா ,பாட்டி வீட்டிற்கு கிளம்பித்தயாராக இருந்தான் . தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தன்னுடைய தந்தை விடுப்பு எடுக்கமுடியாமல் தொடர் பணியில் ஈடுபட்டிருப்பட்டிருந்தார் .

மாலை 4 . 50 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து மீமிசல் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு டிரைவர் முத்தையாவிடம் தாத்தா பாட்டி வீட்டில் இறக்கிவிட்டுவிடும்படி பொறுப்பை ஒப்படைத்தார்..

அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் மீமிசல் செல்லும் பேருந்து நின்றால் அது குமாரின் தாத்தா பாட்டி வீட்டு வாசலாக இருந்திருந்தது . அப்படி வந்து இறங்கிக்கொண்டான் .

அன்றிரவே இவனது பாட்டி “முனியம்மா”, வேப்பமரம் குடைபிடித்திருக்கும் வாசலில் படுத்துக்கொண்டு குமாரின் தலையை நெருடிக்கொண்டே பலப்பல கதைகளுடன் ஒரு பேய்க்கதையும் சொல்லிவைத்தாள். கூடவே பணங்குட்டி, வாத்தியார்வீட்டு புளியமரம் ,பேய்மாடி பங்களா அத்துனை இடங்களுக்கும் போகக்கூடாது. போனால் பேய் பிடித்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, குமார் தூங்கியவுடன் பாட்டியிடம் , “ஏண்டி ..... அவன் லீவுக்கு தான வந்திருக்கான் ? அவன்கிட்ட போயி அங்க போகாத ..... இங்க போகாதன்னு சொன்னா .... எப்புடி அடுத்த லீவுக்கு வருவான் ?”

பாட்டி , “நீங்க சும்மாருங்க உங்களுக்கென்ன வேலைக்கி போய்டுவிங்க. நா சொன்னதெல்லாம் தூக்கிபோட்டுட்டு இந்த ராஜா பயலோட (குமாரின் கிராமத்து நண்பன்) சேந்துக்கிட்டு எல்லா எடத்துக்கும் போய்டுவான் . ஊராவூட்டு புள்ளைய அவங்க அப்பா, அம்மாகிட்ட ஒப்படைக்கிரவர உசுர கைல புடிச்சுக்கிட்டு தான் இருக்கணும்... நாளைலேருந்து ஏ.......... குமாரு ........ ஏ ................குமாரு.................... ன்னு அரை மணிக்கொருக்கா கத்திக்கிட்டே இருக்கணும் . எங்கயாச்சும் போயி மூக்கு மொவர அடிபட்டு வந்துட்டாலோ , பேய் பிசாசு புடிச்சு ஜுரம் வந்து கடந்தாலோ உங்க பொண்ணு கேப்பா , “என்னம்மா எம்புள்ளைய இப்புடி வுட்டுட்டுயேன்னு .”

நீ சொல்றதும் சரிதாண்டி என்ற முனகலுடன் மறுப்பேதும் சொல்லாமல் “பெரிய்......ய ஆளுதாண்டி நீ ...”என்று நமட்டாகவும், பெருமையாகவும் சிரித்துக்கொண்டார் தாத்தா .

அந்த விடுமுறையின் இறுதி நாட்களில் ஓடிக்கொண்டிருந்த குமாருக்கு அவனது தந்தை இறந்து விட்டதாக வந்த செய்தியை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் தஞ்சைக்கு அழைத்துச்சென்றார்கள் தத்தா, பாட்டி .

உயிர் விட்டிருந்த உடலை உட்காரவைத்து வாய் , கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதை குமார் முதன் முதலில் பார்த்தது தன்னுடைய தந்தையாகத்தான் இருந்தது . தன் தந்தையைச்சுற்றி கூட்டமாக யார் யாரோ ஏதேதோ சொல்லி அழுதது இவனையும் ஒருமுறை அழவைத்திருந்தது. அந்த வயதில் இறப்பு பற்றி அவனுக்கு அவ்வளவு தெரிந்திருக்கவில்லை . மூன்று வயது குழந்தையிடம் பேனாப்பிடித்து எழுதச்சொன்னால் எப்படி பேனா பிடிப்பதென்றே தெரியாமல் விழிக்குமோ அப்படி . அன்று மாலையே இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த தனது தந்தையின் உடலின் முன்னால் கொள்ளிச்சட்டி தூக்கிச்செல்ல இவனது தாயின் தங்கை கணவர், “அவன் சின்னப்பிள்ளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

தன்னை எங்கோ விட்டுச்செல்லப் போகிறார்கள் என்று நினைத்த குமார் , சித்தப்பா முறைவேண்டியவரிடம் , “சித்தப்பா நானும் வரேன்” என்கிறான் . வேறு பதில் சொல்லமுடியாதவராய் “வேண்டாம்ப்பா” என்று மட்டும் சொன்னார். பக்கத்திலிருக்கும் ஒருவர் “வேண்டாம் தம்பி அங்கெல்லாம் பேய் இருக்கும்” என்று சொல்ல அவன் முகம் மாறுகிறது . எதையோ தீவிரமாக யோசிக்கத்துவங்கிவிட்டான். தந்தையின் உடலை தூக்கிச்செல்வதைப்பார்த்து . தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்கிறான் .

“அப்பாவ இனிமேல் பாக்க முடியாதா ? வேண்டாம்ப்பா அங்க பேய் இருக்கும்ன்னு சொன்னாரே ஒரு மாமா ? அங்க தான் அப்பாவ தூக்கிட்டு போகப்போறாங்களா ? அன்னைக்கு ஒரு நாள் படிக்காம தெருவுல பசங்களோட ரொம்பநேரம் விளையாண்டுகிட்டு இருந்தப்போ அழைச்சுட்டு போய் coat stand டால அடிச்சி அழ வச்சிட்டோமேன்னு சமாதானப்படுத்த 6 -ம் நம்பர் பஸ்ல கூட்டிட்டு மெடிக்கல் காலேஜ் வர பேசிக்கிட்டே வந்து, பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஏதேதோ கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து திலகர் திடல் இருட்டில் கட்டிப்பிடித்து அழுதுட்டு “ஒன்னோட நல்லதுக்கு தாண்ட அப்பா உன்ன அடிச்சேன்”னு மன்னிப்புக் கேட்டாங்களே அந்த அப்பாவ இனிமேலே பாக்கமுடியாதா ?” தான் அடித்துக்கொன்ற தேள், பள்ளி, கரப்பான் பூச்சி இவைகளும் இப்படித்தானே உறவுகளை பிரிந்து அழுதிருக்கும். என்று அவனால் அல்ல. இன்று வரை நம் யாவரும் அலட்சியப்படுத்தும் விஷயம் .

வருடங்களும், வயதும் ஏறிக்கிடந்த நாளொன்றில் குமாரின் நண்பனான செந்தில், ஒரு நாள் நடு இரவு முற்றிக்கொண்டிருந்த நேரத்தில் மழைத்தூறலில் நனைந்துகொண்டே குமார் .. குமார்ன்னு கதவைத்தட்டி கிராமத்திலிருக்கும் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாக சொல்கிறான் . முகத்தில் தொற்றிக்கொண்ட பதர்ஷ்ட்டத்தையும், உறக்கத்தையும் , துடைத்துக்கொண்டு எப்படா என்கிறான் குமார்.

இப்பதான் ஃபோன் வந்துச்சி. சரி கிளம்பு போவோம் .

ந்தவந்துட்டேன் என்று கிளம்பி TVS 50 வண்டியை எடுத்துக்கொண்டு 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

லேசான மழை தூறிக்கொண்டே இருக்கிறது ,மரம், செடி, கொடிகள் அனைத்துக்கொண்டிருக்கிறது அந்த கிராமத்து சாலையை. ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவிலான சாலை அது. தூரத்தில் வலப்புறத்தில் ஏதோ அசைவதை குமார் பார்த்து நிதானமாக வண்டியை ஓட்டுகிறான் . குறிப்பிட்ட அந்த அசைவு உண்டான இடத்தில் ஒரு மாடு மேய்ந்துகொண்டிருக்கிறது.  இருவரும் திரும்பிப்பார்க்கின்றனர். மாட்டின் அருகில் வயதான பெரியவர் ஒருவர் சட்டை போடாமல் வேட்டிக்கட்டிக்கொண்டு தலையில் வெள்ளை நிற துண்டை முகம் முழுக்க மூடி இருக்கிறார். பீதியில் வண்டி பறக்கிறது .

தன் தந்தையின் இறப்பு குறித்த துக்கங்களை எல்லாம் மறந்திருந்த ஒருநாளில் குமார் செந்திலிடம் , “நைட் 2 மணிக்கு சட்டபோடாம வெள்ளத்துண்டால மூஞ்ச மூடிக்கிட்டு அதுவும் மழையில எந்த மடயண்டா மாடு மேய்ப்பான் . பேயாத்தாண்டா இருக்கும். நல்ல வேல உங்க அப்பாவோட சேர்ந்து நாமளும் போயிருப்போம்.”

“பேயாவது பிசாசாவது” என்று சொன்ன செந்தில் பின்னொருநாளில் தன்னுடைய வீட்டில் மாடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் . பொழுது போகாமல் எதேட்சையாக அவனது வீட்டிற்கு சென்ற குமாரின் கண்ணில் பாலகுமாரனின் "ஏழாவது காதல்" புத்தகம் படவே எடுத்து படிக்க ஆரம்பித்தவனுக்கு இரவு 11 மணி ஆகியிருந்தது தெரியவில்லை. வேறு புத்தகம் படித்துக்கொண்டிருந்த செந்தில் அதை முடித்துவிட்டு. “லைட்ட நிறுத்திட்டு இங்கேயே படுடா இந்த நேரத்துல போயி உங்கவீட்ல யாரையும் எழுப்பாம” என்று உரிமையோட சொல்லிட்டு படுத்து தூங்கிவிட்டான். "ஏழாவது காதலை" முடித்துவிட்ட குமார் லைட்ட நிறுத்திட்டு தூங்கிக்கொண்டிருந்தான் . எத்தனை மணி இருக்கும் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு டப்பா போல் கீழே விழுந்து ஓடுவது போல் இருந்தது. போர்வையை விலக்கி பார்த்த குமாருக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. மறுபடியும் போர்வையை முகத்தில் மூடிக்கொண்டு படுத்துவிடுகிறான். சற்று நேரத்தில் யாரோ திடு திடுவென ஓடும் சப்தம் கேட்கிறது . மாடிப்படியிலிருந்து ஏதோ விழும் சத்தமும் , ஐயோ... அம்மா... என்கிற சத்தமும் கேட்டு எழுந்து லைட்டை போட்டு பார்க்கிறான் குமார் . செந்திலை காணும் ! கீழிருந்த அவனின் வீட்டார்கள் விழித்து என்ன ஏது என்று பார்த்துக்கொண்டிருந்தனர் . “என்னாச்சி செந்தில்” என்று கேட்டவர்களிடம் செந்தில், “யாரோ என்ன தாண்டி போறாங்க , மேல ஏறி ஓடுறாங்க , போட்டு அமுக்குறாங்க” அப்புடின்னான். குமார் முகத்தில வேர்வ கொட்டுது.

மறுநாள் காலையில் கேள்விப்பட்டு செந்திலின் வீடுதேடி வந்து பார்க்க வந்த சரவணன் கிண்டலா சிரிச்சி சிரிச்சி வெறுப்பேத்திக்கிட்டு இருந்தான். அடுத்தநாள் சரவணனின் வீட்டில் எல்லோரும் ஊருக்கு சென்று விட அவனது பெரிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது என்று துணைக்கு குமாரைக்கூப்பிட்டான் . உள்புறமாக மாடிப்படிகொண்ட பெரிய வீடு அது . நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குமாரின் காலை யாரோ உதைத்து தள்ளுவது போல் உணர்ந்து எழுந்து பார்த்தான் . விடிவிளக்கின் ஒளியில் சரவணன் எங்கோ நடந்து செல்வது தெரிந்து குமார் சரவணனிடம் , “டேய்.. எங்கடா போற ? “ திரும்பிப் பார்த்து சரவணன், “டேய் தாத்தா மாடிப்படிலேருந்து தனியா எறங்கி வர்றார் கீழ அழைச்சுட்டு வரேன்”. எங்கடா என்கிறான் குமார். “அங்க பாரு குமார் வந்துகிட்டு இருக்காரு. கீழ உளுந்துட்டாருன்னா போய் சேர்ந்துடுவாருடா வுடுடான்னு மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான் அந்த இரவிலும். “டேய் உங்க தாத்தா செத்து போயி 7 மாசமாகிடுச்சிடான்னு சொன்னா கேட்க்.....கவே மாட்டேங்கிறான்.” ஒரு வழியா அவன உட்க்கார வச்சிட்டு . இருடா நான் அழைச்சுட்டு வந்து தூங்க வைக்கிறேன்னு குமார் சொன்னதுக்கப்புறம் தான் தூங்குனான் சரவணன்.

அடுத்தநாள் நண்பர்கள் மீட்டிங் ப்லேசான பாரி வீட்டில் சரவணனை நிக்கவச்சு கன்னாபின்னான்னு திட்டி.... ஓட்டி எடுத்துட்டு இருந்தான் பாரி . அப்பவும் புடிவாதமா சத்தியம் பண்ணி சொல்றான் சரவணன், “அது எங்க தாத்தா தான்னு .” நைசா பாரிக்கிட்ட போயி குமார் , “என்ன பாரி ராத்திரில தூக்கத்துல தான் அப்புடி பண்ணான்னு நினைச்சேன் இப்பவும் எங்க தாத்தா தான் அதுன்னு இப்புடி அடிச்சி பேசுறான் . ஒரு வேல பேயாத்தான் வந்திருக்காரா அவங்க தாத்தா ? “ பாரி குமார ஏளனமா பார்த்து “ஏன் உனக்கு என்னாச்சி ? நீ நல்லாத்தானே இருந்தே” . “சரி பாரி , விடு ......விடு ......... எனக்கென்னமோ இன்னிக்கு அவன தனியா படுக்க வைக்கவேணாம்னு தோணுது. உங்கவீட்டு மாடிய சுத்தம் பண்ணிவை நானும் வரேன் பய ஒரு மாதிரி தாத்தா நினப்புல பீதியாகி இருக்கான்”. அன்றைய இரவு பாரிவீட்டின் மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் பாரி, சரவணன், குமார் மூவரும் . கடிகாரத்தின் நொடி முள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது . திடீரென பாரி இரண்டாவது முறையாக அம்மா.... அம்மா....ன்னு கூப்டது கேட்ட குமார் விழித்து ஏதும் பேசாதவனாய் படுத்திருந்தான். கொஞ்சம் பயத்தில் . கீழிருந்து என்னப்பான்னு கேட்ட அவங்க அம்மாவிடம், “ஒண்ணுல்ல .... ஒண்ணுல்ல ... யாரும் வராதிங்க அங்கேயே இருங்க”ன்னு சொல்லிட்டு படுத்துவிட்டான் . மறுநாள் பாரியிடம் குமார், “ஏண்டா பாரி நேத்து நைட் அம்மாவ ரெண்டுவாட்டி கூப்ட ? “ சரவணனை கிண்டலடித்த பாரி சொல்லத்தயங்கினாலும் “ஒண்ணுமில்ல மாப்பி (மாப்ள) படுத்திருந்தனா.... ஒரு லேடி என்ன தாண்டி தாண்டி போகுது . காலால மிதிக்கிது அப்படின்னுட்டு இனிமேல் மாடில படுக்கலப்பா......”அப்டின்னதும் குமார் ஜுரத்தில் படுத்துட்டான் . ஜுரத்துல இருந்தவன பாக்க வந்த ரகு, “லே ...... இதுக்கு டாக்டர் , ஊசி, மாத்திரையெல்லாம் வேலைசெய்யாது பேசாம என்னோட வா கீழவாசல் தாண்டி கொசக்கரம்பைல போயி மந்திரிச்சுட்டு வந்துருவோம்” என்றான் . இருவரும் சைக்கிளில் செல்கிறார்கள் .

சைக்கிள் கீழவாசலை தாண்டியதும் இரண்டுபுறமும் வயல்கள் முளைத்துக் கிடந்தது. ஒரு இடத்தில் சைக்கிள் பஞ்சர் ஆனதும் என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருந்த ரெண்டுபேரையும் பார்த்து வண்டியில் போயிக்கொண்டிருந்த ஒருவர், “தம்பி இந்த இடத்தில் ரொம்பநேரம் நிக்காதிங்க . இது நடமாட்டம் உள்ள இடம்” என்றதும் சைக்கிளை தள்ளிக்கொண்டே ஓட்டம் பிடித்தவர்கள் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் வந்துதான் நின்றார்கள்.

தொடர்ந்து பேய் பீதியில் இருந்த குமார், தீபாவளி முடிஞ்ச ஒரு நாளின் இரவில் விஜய் டிவி யில் நடந்தது என்ன பார்த்துகொண்டிருந்தான். அதில் பேய் பற்றிய செய்தியை ஒருவர் திகிலூட்டும் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் அந்த காட்சிகளும், குரலும் சற்று பயமாகவே இருந்தது. இடையில் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறவரான விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவிகள் கட்டாயம் இருக்கிறது என்று முடித்திருந்தார். இன்னிக்கி நைட் எப்படி தூங்க போகிறோம் என்று பயத்துடன் படுத்திருந்த குமார் , தீபாவளிக்கு வாங்கின புதிய முண்டா பனியனுக்கும் பின்னாடி ஒட்டியிருந்த சில்வர் எனாமல் floresent ஸ்டிக்கரை பிச்சி தூக்கி போடாம செவுத்துல ஒட்டிவச்சிருந்தான் புரண்டு படுத்த குமாரின் கண்களில் அந்த sticker இன் ஒளி.. படபடத்துப்போன குமார் தூக்கத்தை மட்டும் தூங்கவைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்து . ஃபேஸ்புக் -ல நாலு பேர்க்கிட்ட சொல்லுவோம். கொஞ்சம் பயம் தெளியும்னு பனியனின் ஸ்டிக்கர் செய்திய போட்டான் . அதுக்கு ஒரு அண்ணன் சொல்றாங்க அது நரகாசுரனின் ஆவியாக இருக்கும்னு ...

புராண காலத்தில் செத்துப்போன நரகாசுரனின் ஆவி இன்னுமா இருக்கு ? நாட்ல மனுசனவிட ஆவிகள் தான் அதிகமா இருக்கும் போலருக்குன்னு தொடர்ந்து பேய் பீதியில் குமார். .

2 comments:

  1. ஐயோ...! சாமீ...!! பயம்மா இருக்கு...!!!

    ReplyDelete
  2. அந்த ஆவிய கொஞ்சம் வர சொல்லுங்க அண்ணா... பேச்சு துணைக்கு உதவியா இருக்கும்

    ReplyDelete