Tuesday, November 30, 2010

அம்மா.

அம்மா



முக்கி முட்டி அவள் என்னை புறந்தள்ளியிருக்கையில்
என் எடை என்னவோ மூன்றே கிலோதான்இந்த மூன்றிற்கா முன்னூறு நாட்கள் !!

சொகுசாய் சொக்கி , கூனிக்கிடந்த என்னை ...
கட்டாயமாக முதல் முறையாய்
அவளிடமிருந்து பிரித்துவிட்டிருந்தாள் ...

அவளுக்கு வலித்திருக்கும்
நமக்கும் வலித்திருந்ததால்.

வலிதான் வாழ்க்கை என்றுஅன்றே வழிகாட்டி உணர்த்திவிட்டிருந்தாள் .

தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டபோது
இரண்டாம் முறை அவளிடமிருந்து
என்னை பிரித்துக்கொண்டள் !!

தாய்ப்பால் நின்றபோது
மூன்றாம் முறை பிரித்துவிட்டிருந்தாள்

தவழ்ந்து, தத்தி, தத்தி நடக்கையில்
நானே அவ்வப்போது அவளை பிரிந்துவிட்டிருந்தேன் !!

வலுக்கட்டாயமாக வகுப்பறைக்கு தள்ளியபோது
கட்டாயமாக நான் மறுத்தும் பிரிந்திருந்தது நான்காம் முறை...

பருவம் தொட்டபோது இருவருமே ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்கவே முற்பட்டிருப்போம் காலத்தின் கட்டாயம்
ஐந்தாம் முறை ...

அவளுக்கே சொந்தமான பாசத்தை
மாற்றாருக்காய் பங்கிட்டுக்கொடுக்கையில்
முதிர்ச்சியுற்றிருந்தாலும் ஆறாம் முறை
அழுதிருப்போம் இருவரும் ...

காலம் அவளிடமிருந்து என்னை பிரிக்க
அவள் கட்டாயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் ...

வலிதான் வாழ்கை என்று கற்றுக்கொடுத்தவள் ...
வாழ்வதற்கான வழியையும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் ...

நிரந்தர பிரிவிற்க்காய் காத்திருக்கிறோம்...

2 comments: